Published : 20 Sep 2023 06:59 AM
Last Updated : 20 Sep 2023 06:59 AM

புவி சுற்றுப்பாதை பயணம் நிறைவு | சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா: இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்.2-ம் விண்ணில் செலுத்தியது. பின்னர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்து, விண்கலத்தில் உள்ள உந்துவிசை இயந்திரங்கள் இயக்கப்பட்டு, அதன் புவி நீள்வட்ட சுற்றுப்பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

இதையடுத்து விண்கலத்தை புவியின் ஈர்ப்பு விசைப்பகுதியில் இருந்து விடுவித்து, சூரியனை நோக்கி பயணிக்க வைக்கும் முயற்சி நேற்று (செப்.19) அதிகாலை 2 மணியளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆதித்யா விண்கலம் தற்போது திட்டத்தின் இலக்கான சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, “ஆதித்யா விண்கலம் புவியின் நீள்வட்டப் பாதையில் தனது பயணத்தை நிறைவு செய்தது. தொடர்ந்து புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்-1 பகுதியை நோக்கி விண்கலம் சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. 110 நாட்களுக்கு பிறகு எல்-1 பகுதிஅருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரியஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத் தப்பட உள்ளது.

அங்கிருந்தபடியே எல்-1 பகுதியை மையமாகக் கொண்ட சுற்றுப்பாதையில் வலம் வந்தவாறு சூரியனின் கரோனா மற்றும் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் பகுதிகளை ஆதித்யா ஆய்வு செய்யும்” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆதித்யா விண்கலம் புவி சுற்றுப்பாதையில் வலம்வந்தபோது மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சி தகவல்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதன்படி விண்கலத்தில் இருந்த ஸ்டெப்ஸ் கருவியின் 6 சென்சார்கள் மூலம் செப்.10-ம் தேதி புவியில் இருந்து 50 ஆயிரம் கி.மீ தூரத்தில் உள்ள அதிவெப்பச் சூழல்,அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புவியைச் சுற்றியுள்ள கனிமங்கள் மற்றும் அவற்றின் பண்புகளை விஞ்ஞானிகள் அறிந்து கொள்ள இந்த தரவுகள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x