Published : 16 Sep 2023 07:52 PM
Last Updated : 16 Sep 2023 07:52 PM

பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க ராணுவம் தீவிரம் - காஷ்மீரின் அனந்தநாக்கில் நடப்பது என்ன?

கோகெர்நாக் அருகே உள்ள கடோல் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் | படம்: நிசார் அகமது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் 4 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க ராணுவம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் கோகெர்நாக் அருகே உள்ள கடோல் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த புதன்கிழமை (செப்.13) பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மலையும், அடர்ந்த வனப் பகுதியுமான அங்கு தேடுதல் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, உயரமான இடத்தில் இருந்தவாறு அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், மூன்று ராணுவ அதிகாரிகளும், ஜம்மு காஷ்மீர் மாநில டிஎஸ்பி ஒருவரும் என நான்கு பேர் வீரமரணம் அடைந்தனர்.

4-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை: ஜம்மு காஷ்மீரில் குறிப்பாக காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தீவிர கவனம் செலுத்தி வரும் மத்திய அரசுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளன. புதன்கிழமை தொடங்கிய தேடுதல் வேட்டை 4-வது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது.

உயர் தொழில்நுட்ப பயன்பாடு: முன்னதாக, அந்தப் பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கடோல் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக பாதுகாப்புப் படை வசம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கேற்ப சனிக்கிழமை கூடுதல் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிநவீன ட்ரோன்கள் மூலம் அடர்ந்த வனப் பகுதி தொடர் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

"கடோல் வனப்பகுதியில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் அவர்கள் நிர்மூலமாக்கப்படுவார்கள்" என ஜம்மு காஷ்மீர் கூடுதல் டிஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர், "படைகளின் தாக்குதல் துல்லியமானதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக உயர் தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.

ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பங்கரவாதிகள் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படும் இடங்களை நோக்கி சிறிய ரக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பாரமுல்லாவில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இதனிடையே, வட காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் ஹத்லங்கா என்ற இடத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்களில் இருவரின் உடல்களை இந்திய ராணுவம் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டே அந்த பயங்கரவாதியின் உடலை, பாகிஸ்தான் ராணுவம் தங்கள் பக்கம் கொண்டு சென்றதாகவும், இதன்மூலம் அந்த நாடு போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இருப்பதாகவும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x