Published : 01 Sep 2023 05:50 AM
Last Updated : 01 Sep 2023 05:50 AM

நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் - லேண்டரின் ஆய்வில் கண்டறியப்பட்டதாக இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதும், அங்கு நில அதிர்வு ஏற்பட்டதும் லேண்டர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பு: விக்ரம் லேண்டரில் உள்ள ராம்பா- எல்பி எனும் (RAMBHA-L;Radio Anatomy of Moon Bound Hyper sensitive Ionosphere and Atmosphere - Langmuir Probe) கருவி, நிலவில் பிளாஸ்மா மூலக்கூறுகளின் வகைப்பாட்டை ஆராய்ந்து வருகிறது. இந்த ராம்பா கருவி, தென்துருவப் பகுதியில் பிளாஸ்மா மூலக்கூறுகள் இருப்பதை முதன்
முதலாக அளவீடு செய்துள்ளது.

இந்த அளவீட்டின் மூலம் நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா மூலக்கூறுகளின் அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சூரிய வெப்பக் காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது. பிளாஸ்மா என்பது எலெக்ட்ரான்கள் கொண்ட ஒரு பகுதியாகும். நிலவில் ஒரு கனமீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலெக்ட்ரான்கள் அடர்த்தி இருப்பதாக ராம்பாஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அளவீடுகள் எதிர்காலத்தில் நிலவுக்கு அனுப்பப்பட உள்ள விண்கலன்களை வடிவமைப்பதில் உதவியாக இருக்கும். ஏனெனில், பிளாஸ்மாவின் அளவு அதிகமாக இருப்பின், விண்கலத்துடனான தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்படும். மறுபுறம் லேண்டரில் உள்ள இல்சா (Instrument for the Lunar Seismic Activity-ILSA) எனும் சாதனம், நில அதிர்வுகளை ஆய்வு செய்துவருகிறது. இதன்மூலம் ரோவரின் நகர்வுகள் மற்றும் லேண்டரின் சேஸ்ட் கருவி துளையிடுதல் செயல்களால் உருவாகும் அதிர்வுகளையும் கணக்கிட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி நிலவில் இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வையும் இல்சா பதிவுசெய்துள்ளது. இதேபோல, ரோவரில் உள்ள ஏபிஎக்ஸ்எஸ் கருவியும் நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அந்தப் பகுதியில் அதிக அளவில் உள்ள சல்ஃபர் தனிமம் இயற்கையாகவே உள்ளதா அல்லது எரிமலை வெடிப்பு, விண்கற்கள் விழுதல் போன்றவற்றால் உருவானதா என்று விஞ்ஞானிகள் அடுத்தகட்ட ஆய்வை முன்னெடுக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, நிலவில் ரோவர் வாகனம் பாதுகாப்பாக வலம் வரும் படக்காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரின் இமேஜிங் கேமரா மூலம் இந்தக் காட்சி எடுக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ந்து ரோவரை குழந்தைபோல லேண்டர் கண்காணித்து வருவதாகவும், ரோவரில் உள்ள ஏபிஎக்ஸ்எஸ் கருவி இயக்கத்தையும் தெளிவாகக் காணமுடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேண்டர், ரோவர் ஆகிய கலன்களின் ஆய்வுக் காலம் வரும் 3-ம் தேதியுடன் நிறைவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x