Published : 25 Aug 2023 05:02 AM
Last Updated : 25 Aug 2023 05:02 AM

நிலவில் ஆய்வு தொடங்கியது ரோவர் - அனைத்தும் திட்டமிட்டபடி நடக்கிறது என இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 லேண்டர், ரோவர் கலன்கள் ஆய்வுப் பணிகளை தொடங்கிவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்டமாக, 41 நாள் பயணத்துக்கு பிறகு, நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நேற்று முன்தினம் மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் சாதனையை இந்தியா படைத்தது.

சில மணி நேரங்களுக்கு பிறகு, லேண்டர் கலனில் இருந்த ரோவர் வாகனத்தை பத்திரமாக நிலவில் தரையிறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஏற்பட்ட சில இடர்ப்பாடுகளை சரிசெய்து, நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நள்ளிரவு 1.30 மணி அளவில் லேண்டரில் இருந்து ரோவர் வாகனம், நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில், லேண்டர், ரோவர் கலன்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி நடந்து வருகின்றன. லேண்டர், ரோவர் கலன்களின் இயக்கம், அதில் உள்ள கருவிகளின் செயல்பாடுகள் சீராக உள்ளன. லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே ஆகிய ஆய்வுக் கருவிகளும் இயங்கத் தொடங்கின. ரோவர் வாகனம் நிலவில் நல்ல முறையில் நகர்ந்து செல்கிறது. அதேபோல, நிலவின்சுற்றுப்பாதையில் வலம் வரும் உந்துவிசை கலனில் உள்ள ஷேப் எனும் சாதனம் கடந்த 20-ம் தேதி முதல் தனது ஆய்வுப் பணியை செய்துவருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சிலர் கூறியதாவது: லேண்டர் கலன், நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் வாகனம், நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்யும். இதற்காக லேண்டரில் 4, ரோவரில் 2 என மொத்தம் 6 வகை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. லேண்டரில் உள்ள ராம்பா, இல்சா, சாஸ்டே சாதனங்கள் மூலம் நிலவில் மேற்பரப்பு வெப்பம், நில அதிர்வுகள், அயனி கூறுகள் பரிசோதனை செய்யப்படும்.

லேண்டரில் உள்ள நாசாவின் எல்ஆர்ஏ (லேசர் ரெட்ரோ ரிஃப்ளக்டர் அரே) எனும் கருவி, பிரதிபலிப்பான் தொழில்நுட்பத்தை கொண்டது. அது லேசர் கற்றைகளை பிரதிபலித்து பூமிக்கும், நிலவுக்குமான தூரத்தை துல்லியமாக கணிக்கும்.

ரோவர் வாகனம் தனது 6 சக்கரங்கள், சோலார் பேனல் உதவியுடன் நிலவின் மேற்பரப்பில் விநாடிக்கு ஒரு செ.மீ. வேகத்தில் நகர்கிறது. இது தனது பாதையில் தென்படும் பொருட்களை ஸ்கேன் செய்து, தரவுகளை அனுப்பும். அதில் உள்ள ஏபிஎக்ஸ்எஸ் எனும் கருவி நிலவின் மேற்பரப்பில் லேசர் கற்றைகளை செலுத்தி, அதன்மூலம் வெளியாகும் ஆவியை கொண்டு நிலவின் மணல் தன்மையை ஆய்வு செய்யும். லிப்ஸ் கருவி ஆல்பா கதிர் மூலம் தரைப் பகுதியில் 10 செ.மீ.வரை துளையிட்டு மெக்னீசியம், அலுமினியம் போன்ற தனிமங்களை கண்டறிந்து, தகவல்களை லேண்டருக்கு அனுப்பும்.

ரோவரின் பின்பக்க சக்கரங்களில் அசோக சக்கர சின்னம், இஸ்ரோவின் ‘லோகோ’ பொறிக்கப்பட்டுள்ளது. நிலவில் ரோவர் ஊர்ந்து செல்லும் பகுதிகளில் இதன் அச்சு பதியும். நிலவில் காற்று இல்லாததால், இந்த தடம் அழியாது.

லேண்டர், ரோவர் ஆகியவை 14 நாட்கள் வரை ஆய்வு செய்யும். 2 வாரம் முடிந்ததும் நிலாவில் இரவு வந்துவிடும். இரவு நேரத்தில் அங்கு மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். சோலார் மின்சக்தியை நம்பியுள்ள ரோவர்,லேண்டரால் அந்த உறைபனியில் இயங்க முடியாது. 2 வாரங்கள் நீடிக்கும் தொடர் உறைபனியால் அவை செயலிழக்க வாய்ப்புஉள்ளது.

எனினும், அதற்கு முன்பாக லேண்டர், ரோவர் அனுப்ப உள்ள தரவுகள்தான் நிலவை பற்றிய புதிய பரிமாணத்தை வழங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x