Published : 23 Aug 2023 10:17 AM
Last Updated : 23 Aug 2023 10:17 AM

லட்சத்தீவு எம்.பி. வழக்கு | கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு ரத்து - 6 மாதத்தில் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முகமது பைசல்

புதுடெல்லி: கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு மக்களவைத் தொகுதி எம்பி முகமது பைசல் குற்றவாளி என்று செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ள கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.எம்.சையதின் மருமகன் முகமது சாலியை 2009-ம்ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது கொலை செய்ய முயற்சித்ததாக மக்களவை எம்.பி. முகமது பைசல் உள்பட 4 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் முகமது பைசல் உள்பட 4 பேருக்கு10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து கவரட்டி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரியில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட நிலையில், அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது. இதையடுத்து முகமது பைசலுக்கு எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கேரள உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜால் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், முகமது பைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தர விட்டனர். இருப்பினும், முகமது பைசல் எம்.பி.யாக தொடரலாம் என்றும், 6 மாதத்துக்குள் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x