Published : 18 Aug 2023 11:17 AM
Last Updated : 18 Aug 2023 11:17 AM

தமிழகத்துக்கு தண்ணீர் | காவிரி மேலாண்மை ஆணையம் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - டிகே சிவகுமார்

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கும் முடிவை காவிரி மேலாண்மை ஆணையம் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்போவதாக கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாக திறந்து விடவில்லை என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் ஆகஸ்ட் வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரில் நிலுவையில் உள்ள 37.9 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால், தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்துக்கு 10 டிஎம்சி நீர் திறந்துவிட உத்தரவிட்டார்.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டிகே சிவகுமார், "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவிலேயே தற்போது கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. சில பகுதிகளில் கடும் வறட்சிகூட ஏற்பட்டுள்ளன.

இருந்தும் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கி கடந்த 4, 5 நாட்களாகவே நாங்கள் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். இருப்பினும் காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகள் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் விவகாரத்தில் தங்களின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம், ஏனெனில் இதனால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது" என்றார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, "காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்தில் சரியான வாதங்களை முன்வைக்காமல் கர்நாட்க விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக சிவகுமார் தமிழக மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில், "தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு கடிதம் எழுதவேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் இருக்கும்போது நாங்கள் திறந்து விடுவோம். தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நிலையிலும், நாங்கள் 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட இருக்கிறோம். எங்களுடைய முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன. அவர்களின் தண்ணீர் தேவை 27 டிஎம்சி, ஆனால் எங்களால் அவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x