Published : 17 Aug 2023 02:21 PM
Last Updated : 17 Aug 2023 02:21 PM

சந்திரயான்-3 | விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்

நிலவுக்கு மிக அருகில் விக்ரம் லேண்டர்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவின் சுற்றுப் பாதையில் பயணித்து வருகிறது. வரும் 23-ம் தேதி லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுப் பணியை மேற்கொள்ள உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.15 மணிக்கு சந்திரயான்-3 விண்கலத்தில் லேண்டர் பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுக்கு 153 x 163 கி.மீ. தொலைவில் ரோவர் பயணித்து வருகிறது. படிப்படியாக இதன் உயரம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 23-ம் தேதி லேண்டர் நிலவில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவ பகுதியில் இதை தரையிறக்க உள்ளனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

நிலவை நோக்கிய சந்திரயான்-3 பயணம்: சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் 615 கோடி ரூபாயில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப்பாதையை நீட்டிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ம் தேதி புவி வட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. தற்போது, நிலவுக்கு மிக அருகில் சுற்றுப்பாதையில் லேண்டர் பயணித்து வருகிறது. 23-ம் தேதி லேண்டரை சாஃப்ட் லேண்டிங் செய்ய உள்ளனர் விஞ்ஞானிகள். நிலவில் நீர் ஆதாரம் உட்பட பல்வேறு ஆய்வு பணிகளை இதன் ரோவர் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x