Published : 12 Aug 2023 07:20 AM
Last Updated : 12 Aug 2023 07:20 AM

அமலாக்கத் துறை மனுவுக்கு பதிலளிக்க நியூஸ்கிளிக், முதன்மை ஆசிரியருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், நேற்று அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் மனு தொடர்பாக பதிலளிக்கக் கோரி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும் அதன் நிறுவனரும் முதன்மை ஆசிரியருமான பிரபீர் புர்கயாஷ்தாவுக்கும் நோட் டீஸ் அனுப்பியுள்ளது.

நியூஸ் கிளிக் நிறுவனம் சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்று செயல்பட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை 2021-ம் ஆண்டு செப்டம்பர்
மாதம் நியூஸ்கிளிக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையில் இருந்து பாதுகாப்புக் கோரி நியூஸ் கிளிக் நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீதும், அதன் ஆசிரியர் பிரபீர் புர்கயாஷ்தா மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக நியூஸ்கிளிக் விவகாரத்தில் அமலாக்கத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு சீனாவிடமிருந்து நிதி வருகிறது என்று செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை நியூஸ்கிளிக் நிறுவனம் மீதான தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

2 வாரத்துக்குள் பதில்: இந்தச் சூழலில்தான், நியூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக் கோரி அமலாக்கத் துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அமலாக்கத் துறை மனு குறித்து 2 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கும் அதன் ஆசிரியருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x