Published : 04 Aug 2023 04:51 PM
Last Updated : 04 Aug 2023 04:51 PM

“நாடாளுமன்றத்தில் மீண்டும் கர்ஜனை” - ராகுல் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததில் காங்கிரஸ் உற்சாகம்

புதுடெல்லி: மோடி பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை, புத்தரின் மேற்கோளைக் கூறி பிரியங்கா காந்தி வரவேற்றுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று (ஆக.4) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதன்மூலம், தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக முடியும் என்பதால் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. | வாசிக்க > ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

‘உண்மையை மறைக்க முடியாது’ - இந்த உத்தரவை வரவேற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "மூன்று விஷயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், நிலவு, உண்மை - கவுதம புத்தர்" என்று தெரிவித்துள்ளார். மேலும், நியாயமான தீர்ப்புக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், "வாய்மையே வெல்லும்" என்றும் தெரிவித்துள்ளார்.

‘எனது கடமை ஒன்றே’ - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே... இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ என்று தெரிவித்துள்ளார்.

வெறுப்புக்கு எதிரான வெற்றி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி, சத்யமவே ஜெயதே. ஜெய் ஹிந்த்" என்று தெரிவித்துள்ளது.

உலகமே சபாநாயகரை பார்க்கிறது: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்,"சபாநாயகர் இப்போது முடிவு எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த நாடும், உலகமும் சபாநாயகரை உற்று நோக்கிக்கொண்டு இருக்கிறது. தாமாகவே தகுதி இழப்பை உடனடியாக ரத்து செய்யவேண்டும். அதுநான் நமது தேவை நாட்டுக்கானத் தேவை. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் நீதிமன்ற உத்தரவு நகலுடன் சபாநாயருடன் கோரிக்கை வைப்பார்கள்" என்று கூறினார்.

சபாநாயகருக்கு கடிதம் எழுதுவேன்: “உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ராகுல் காந்திக்கு மிகப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ராகுல் காந்திக்கு எதிரான சதிச்செயல் இன்று தோல்வியடைந்துள்ளது. நாங்கள் சபாநாயகரைச் சந்தித்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரினோம். ராகுல் காந்தியின் தகுதி இழப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இதுகுறித்து நான் சபாநாயகருக்கு எழுதுவேன்" என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சிங்கம் மீண்டும் கர்ஜிக்கும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில், “நாடாளுமன்றத்தில் சிங்கம் மீண்டும் கர்ஜிக்க இருப்பதால் நாங்கள் மிகவும் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் ராகுல் காந்தியின் தகுதி இழப்பை சபாநாயகர் ரத்து செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் தண்டனைக்கு இடைக்காலத் தடை: கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் தேதி நிராகரித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டைனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, "இந்த வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த விதமான சிறப்பு காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் குறிப்பிடவில்லை. தண்டனை 1 வருடம் 11 மாதங்கள் வழங்கப்பட்டிருந்தால் எம்.பி பதவி பறிக்கப்பட்டிருக்காது. இறுதி தீர்ப்பு வரும் வரை அந்தத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட வேண்டும். விசாரணை நீதிமன்ற உத்தரவின் பாதிப்பு பெரிய அளவில் உள்ளது. அது ராகுல் காந்தி தனது பொது வாழ்க்கையைத் தொடரும் உரிமையைப் பாதிப்பது மட்டும் இல்லாமல், அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையையும் பாதித்துள்ளது” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x