Published : 02 Aug 2023 05:22 PM
Last Updated : 02 Aug 2023 05:22 PM

பிரதமர் மோடியை ‘திருடர்களின் தளபதி’ என கூறியதாக வழக்கு: ராகுல் காந்தி ஆஜராக விலக்கு அளித்த ஐகோர்ட்

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தளபதி’ என ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து செப்டம்பர் 26 வரை விலக்கு அளித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி, கடந்த 2018 செப்டம்பர் 20-ம் தேதி, ஜெய்ப்பூரிலும், பின்னர் அமேதியிலும் பிரதமர் நரேந்திர மோடியை ‘திருடர்களின் தளபதி’ என விமர்சித்திருந்தார். மேலும், இது தொடர்பாக அப்போது (செப்டம்பர் 24) அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவின் திருடரின் தளபதி பற்றிய சோகமான உண்மை. நான் நாட்டின் பிரதமராக விரும்பவில்லை, நாட்டின் ஒரு காவலராக விரும்புகிறேன் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால் காவலர் நாட்டின் திருடர் என்று மக்கள் சொல்கிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

ராகுல் காந்தியின் ஜெய்ப்பூர் மற்றும் அமேதி பேச்சு மற்றும் அவரது ட்விட்டர் பதிவு ஆகியவற்றைக் கொண்டு மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான மகேஷ் ஷிரிஸ்ரீமால் என்பவர், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். "திருடர்களின் தளபதி என நரேந்திர மோடியை கூறியதன் மூலம் பாஜக தொண்டர்களை ராகுல் காந்தி திருடர்கள் என பழித்துள்ளார். அவர் பேசியதும், அவரது ட்விட்டர் பதிவும் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இதன் மூலம் ராகுல் காந்தி வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறு பரப்பி உள்ளார்" என மகேஷ் ஷிரிஸ்ரீமால் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை எதிர்த்து ராகுல் காந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வி.கோட்வால் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் மீது விசாரணை நடைபெறவில்லை. விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து செப்டம்பர் 26 வரை விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x