Published : 26 Jul 2023 06:29 AM
Last Updated : 26 Jul 2023 06:29 AM

மணிப்பூரில் நிபந்தனைகளுடன் தரைவழி இணைய சேவைக்கு அனுமதி: செல்போன் இணைய சேவைக்கு தொடரும் தடை

இம்பால்: கலவரம் நடந்து வரும் மணிப்பூரில் நிபந்தனைகளுடன் பகுதியளவு இணையதள சேவைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் வசித்துவருகின்றனர். அதேபோல் நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைத்தேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர். மைத்தேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து அளிக்கப்படக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ம் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு சமீபத்தில் குகி பழங்குடியின பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இதுபோன்று அங்கு மேலும் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மணிப்பூரில் கலவரம் தொடங்கியது முதலே அங்கு இணையசேவை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நலன், பாதுகாப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இணைய சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் 85 நாள்களுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்தில் அங்கு பகுதியளவு இணைய சேவை நேற்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பிராட்பேண்ட் எனும் தரைவழி இணைய சேவைக்கு மட்டும் அனுமதி, மேலும் நுகர்வோர் பயன்படுத்தும் கணினியின் ஐ.பி. எண், பயன்பாடு தொடர்ந்து கண்
காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறை தொடர்பான செய்திகள், வீடியோக்கள், போலிச் செய்திகள் எதுவும் பகிரக்கூடாது. பகிரப்படும் அனைத்துத் தகவல்களும் சமூக வலைத்தளங்களும் கண்காணிக்கப்படும். மீறி பகிர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. செல்போனில் இணைய சேவையை பயன்படுத்தத் தடை, வை-ஃபை, ஹாட்ஸ்பாட், விபிஎன் செயலி மற்றும் சேவை ஆகியவை பயன்படுத்தவும் தடை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் மேலும் கலவரம் ஏற்படுவதைத் தடுக்க இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த மே 3-ம் தேதி அங்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. இணைய சேவை ரத்து செய்யப்பட்டதால் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், சமையல் காஸ் புக்கிங் செய்தல், ஆன்-லைனில் பெறக்கூடிய பொதுமக்கள் நலன் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இவற்றை மனதில் கொண்டு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x