Last Updated : 25 Jul, 2023 06:19 AM

39  

Published : 25 Jul 2023 06:19 AM
Last Updated : 25 Jul 2023 06:19 AM

அகமதியா முஸ்லிம்கள் விவகாரம் | ஆந்திர வக்ஃபு வாரியத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு - மாநில அரசு தலையிட ஸ்மிருதி இரானி கடிதம்

அமிர்தசரஸில் உள்ள காடியனில் உள்ள அஹ்மதியா சமூகத்தின் ஒரு 'மினாரா' (வழிபாட்டு இடம்)

புதுடெல்லி: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டம் காதியானில் 19-ம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் இடையே ‘அகமதியா’ என்ற புதிய பிரிவு தோன்றியது. காதியானி என்றும் அழைக்கப்படும் இப்பிரிவினர் பிற முஸ்லிம்களை போல நபிகள் நாயகத்தை (ஸல்) கடைசி இறைத் தூதராகக் கருதுவதில்லை. மாறாக, தங்கள் பிரிவில் வாழ்ந்த அகமதியாவின் நிறுவனரான மிர்சா குலாம் அகமதுவை கடைசி இறைத் தூதராக ஏற்றுள்ளனர்.

முஸ்லிம்கள் தங்கள் இறைவனான அல்லாவை தவிர வேறு எவரையும் வழிபடுவதில்லை. ஆனால் அகமதியாக்கள், தாங்கள் கடைசி இறைத் தூதராகக் கருதும் மிர்சா குலாம் அகமதியாவையும் வழிபடுகின்றனர். இதுதவிர மேலும் பல காரணங்களால் உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள், அகமதியாக்களை தங்கள் சமூகத்தின் பிரிவாகக் கருதி தங்களுடன் சேர்ப்பதில்லை.

எனினும் இந்தியாவில் அகமதியாக்களை மத்திய அரசு முஸ்லிம்களின் ஒரு பிரிவாகவே கருதுகிறது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இந்தியாவில் சுமார் 1 லட்சம் அகமதியாக்கள் இருப்பதாகப் பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில முஸ்லிம் வக்ஃபு வாரியம் கடந்த 2012-ம் வருடம், அகமதியா பிரிவினரை, ‘காஃபிர்’ (முஸ்லிம் அல்லாதவர்)’ என்று கூறி தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் அகமதியாக்கள் வழக்கு தொடுத்து, தடை உத்தரவு பெற்றனர். இதையடுத்து ஆந்திரா இரண்டாகப் பிரிந்த பிறகு மீண்டும் அதே தீர்மானத்ததை கடந்த பிப்ரவரி 3-ல் நிறைவேற்றியது. இதை எதிர்த்து, அகமதியாக்கள் கடந்த 20 ஆம் தேதி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அப்போது, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் வக்ஃபு வாரியங்கள் தங்களை காஃபிர் எனக் கூறி ஒதுக்கி வைத்துள்ளதாக குறிப்பிட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினர்.

இதை ஏற்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஜவஹர் ரெட்டிக்கு எழுதிய கடிதத்தில், “அகமதியாக்களை இஸ்லாத்தினர் அல்ல என்று தீர்மானிக்க வக்ஃபு வாரியத்திற்கு அதிகாரமில்லை. மாநில அரசின் கீழ் செயல்படும் இந்த வாரியம் சட்டவிரோத தீர்மானம் மூலம், அகமதியாக்கள் மீது காழ்ப்புணர்வை காட்டுவது தவறு. முஸ்லிம்களின் சொத்துகள் நிர்வாகம் தவிர, இதுபோன்ற விவகாரங்களில் வக்ஃபு வாரியத்தினர் தலையிட அதிகாரமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற முஸ்லிம் நாடுகளை விட பாகிஸ்தானில் அகமதியாக்களுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இப்பிரிவினருக்கு எதிராக 1973-ல் அதிபராக இருந்த பூட்டோ ஒரு சட்டம் இயற்றினார். இதன்படி, தனி மசூதிகளில் தொழுகை நடத்தும் அகமதியாக்கள் அதற்கான பாங்கு ஒலியை ஒலிப்பதும் சிறைத் தண்டனைக்கு உரிய குற்றம் என அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x