Last Updated : 23 Jul, 2023 05:31 AM

 

Published : 23 Jul 2023 05:31 AM
Last Updated : 23 Jul 2023 05:31 AM

டெல்லி அரசு பணிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் நியமனம் - நடவடிக்கை எடுக்கத் தயாராகும் பணியாளர் துறை

புதுடெல்லி: டெல்லி அரசுப் பணிகளில் தங்கள் கட்சியினர் உள்ளிட்ட 437 பேரை ஆம் ஆத்மி அரசு அமர்த்தியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிராக அரசுப் பணியாளர் துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும் உள்துறை, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் மத்திய அரசின் கீழ் உள்ளன. இவற்றை துணைநிலை ஆளுநர் மூலமாக மத்திய அரசு நிர்வகிக்கிறது. இத்துடன், டெல்லியின் குடிமைப்பணி அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பொறுப்பும் மத்திய அரசின் கீழ் உள்ளது.

இந்நிலையில் டெல்லி அரசின் பல முக்கியத் துறைகளில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தனது கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 437 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளார். இவர்கள் மூலம், தமக்கு வேண்டியப் பணிகளை செய்துகொண்டு குடிமைப்பணி அதிகாரிகளுக்கு இணையான ஒரு அரசு நிர்வாகத்தை அவர் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த 437 பேர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுப் பணியாளர் துறை தயாராகி வருகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் டெல்லி அசின் குடிமைப்பணி அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “இதுபோல், பணி அமர்த்தப்பட்ட தனிநபர்களுக்கு எங்களை போன்ற குடிமைப்பணி அதிகாரிகளுக்கு இணையான ஊதியமும் வசதிகளும் அளிக்கப்படுகிறது. இந்தப் பணி அமர்த்தலில் எந்தவொரு இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. இவர்களுக்கு அரசு விதிமுறைகள் தெரியாமல் பல திட்டங்களிலும், நிர்வாகத்திலும் அவை மீறப்படுகின்றன. எனவே, இந்த 437 பேரின் ஒப்பந்தத்தை அரசுப் பணியாளர் துறை ரத்து செய்ய உள்ளது” என்று தெரிவித்தனர்.

இதுபோன்ற தனிநபர்களை அதிகாரிகளாக நியமித்து ஆம் ஆத்மி அரசு தனது அரசியல் கட்சி நடவடிக்கைகளையும் அலுவலகங்களில் நடத்துவதாக புகார் கூறப்படுகிறது. இந்த பணியமர்த்தல்கள், டெல்லியின் சட்டப்பேரவை அலுவலகங்கள் மற்றும் அதன் நிலைக்குழுக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான டெல்லி மாநில ஆணையம் மற்றும் டெல்லி அரசின் கீழ் செயல்படும் சில பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிகம் என கூறப்படுகிறது.

இவற்றில் அப்பணிக்கான கல்வித்தகுதியும் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனப் புகார் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக, டெல்லி எம்எல்ஏ சவுரவ் குமார் பாண்டே அலுவலகத்தில் உதவியாளராக ரூ.18,000 ஊதியத்தில் ஒருவர் பணியாற்றி வந்தார். அவர், டெல்லி சட்டப்பேரவை ஆய்வுப் பிரிவில் ஆய்வாளராக ரூ.60,000 ஊதியத்தில் நியமிக்கப்பட்டுள்ளதாக புகார் உள்ளது.

இப்புகார் குறித்து ஆம் ஆத்மி நிர்வாகிகள் கூறும்போது, “தனிநபர்களை அரசு அலுவல கங்களில் நியமிக்கும் வழக்கத்தை மத்திய அரசுதான் முதலில் தொடங்கியது. இவர்களை மத்திய அரசில் பல துறைகளின் அலுவலகங்களில் சிறப்புச் செயலாளர்களாக நியமித்துள்ளது.

இந்தப் புதிய பதவி அவர்களுக்காகவே உருவாக்கப்பட்டு, அதற்கு அதிக அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருசிலரை துறைகளின் செயலாளராகவும் மத்திய அரசு நியமித்துள்ளது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x