Published : 22 Jul 2023 05:37 AM
Last Updated : 22 Jul 2023 05:37 AM

சிறை தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ராகுல் காந்தி மனு ஆக.4-ல் விசாரணை

புதுடெல்லி: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி, ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, ‘‘எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்’’ என்று கேள்வி எழுப்பினார். அவரது பேச்சு மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக கூறி குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி தகுதியிழப்புக்கு ஆளானார். பின்னர் கீழ்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றமும் பிறகு குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன. இந்நிலையில், 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘‘கடந்த ஜூலை 7-ம் தேதி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்காவிட்டால், பேச்சுரிமை, கருத்துரிமையின் கழுத்தை நெரிப்பது போலாகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘‘ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், கடந்த 111 நாட்களாக அவரால் எம்.பி. பணிகளை செய்ய இயலவில்லை. மேலும், அந்தத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க கூடும். எம்.பி. பதவி தகுதியிழப்பால் அவரால் கடந்த முறை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க முடியவில்லை. தற்போது நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அவர் பங்கேற்க முடியவில்லை. எனவே, ராகுலுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை வைக்கிறேன்’’ என்றார்.

அவரது கருத்தை கேட்ட நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர், புகார்தாரரும் பாஜக எம்எல்ஏ.வுமான புர்னேஷ் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கை ஆகஸ்ட் 4-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x