Published : 21 Jul 2023 05:55 AM
Last Updated : 21 Jul 2023 05:55 AM

தெலங்கானா அரசை கண்டித்து கொட்டும் மழையில் மத்திய அமைச்சர் போராட்டம்

ஹைதராபாத்தில் கொட்டும் மழையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய இணையமைச்சர் கிஷன்ரெட்டி.

ஹைதராபாத்: தெலங்கானா மாநில அரசின் 2 படுக்கை அறை கொண்ட இலவச தொகுப்பு வீடுகள் திட்டத்தில் ஹைதராபாத் பாடசிங்காரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை ஆய்வு செய்ய பாஜக தீர்மானித்தது.

இதன்படி மத்திய இணை அமைச்சரும், பாஜக மாநில தலைவருமான கிஷன் ரெட்டி தலைமையில் ஏராளமான பாஜகவினர் நேற்று காலை சம்ஷாபாத்திலிருந்து பாட சிங்காரம் பகுதிக்கு செல்ல முயன்றனர்.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கிஷன் ரெட்டி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். ஏராளமான பாஜகவினரும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதுகுறித்து கிஷன் ரெட்டி கூறும்போது, "தெலங்கானாவில் ஆளும் கட்சியினர் திடீரென ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்த எவ்வித அனுமதியும் தேவை இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள், மாநில அரசின் திட்டங்களை பார்வையிடக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது. போலீஸாரின் இரட்டை வேட நாடகத்தை கண்டிக்கிறோம். ஏழைகளுக்கு வீடு கட்டி தருகிறோம் என கூறி நாடகமாடும் முதல்வர் சந்திரசேகர ராவையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்றார்.

இதனை தொடர்ந்து மத்திய இணையமைச்சர் கிஷன் ரெட்டி போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார். பல பகுதிகளில் சுற்றி இறுதியில் நேற்று மதியம் நாம்பல்லியில் உள்ள பாஜக மாநில அலுவலகத்தில் அவர் இறக்கிவிடப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x