Published : 20 Jul 2023 04:36 PM
Last Updated : 20 Jul 2023 04:36 PM

மணிப்பூர் கொடூரம் | “அந்த கும்பலிடம் எங்களைப் பிடித்துக் கொடுத்ததே போலீஸ்தான்” - பாதிக்கப்பட்ட பெண்

இம்பால்: மணிப்பூரில் ஆண்கள் கும்பலால் இரண்டு பெண்கள் நிர்வாணமாக இட்டுச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ‘போலீசார்தான் தங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தனர்’ என்று பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அவர், "கொலைவெறியுடன் எங்கள் கிராமத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அந்த கும்பலில் போலீசாரும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மணிப்பூரின் கங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் என்ற கிராமத்தில் வாழும் குகி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் பெண்கள். இவர்களில் ஒருவருக்கு 20+ வயதும், மற்றவருக்கு 40+ வயதும் ஆகிறது. மைதேயி சமூகத்தவர்களை பழங்குடி பட்டியல் சமூகத்தவர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை எதிர்த்து குகி பழங்குடி மக்கள் சார்பில் மே 3-ம் தேதி மாபெரும் பேரணி நடைபெற்றதை அடுத்து, மே 4-ம் தேதி பி பைனோம் கிராமத்துக்குள் நுழைந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், அங்கு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரின் தந்தையும் சகோதரரும் அந்த கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதையடுத்து, அந்த கும்பல் இரண்டு பெண்களையும் நிர்வாணப்படுத்தி வயல்வெளிக்கு இழுத்துச் சென்று அங்கு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் மே 18-ம் தேதி, தவுபால் மாவட்டத்தில் உள்ள நோங்போ் செக்மாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் மே 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு பெண்கள் நிர்வாணமாக இட்டுச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு போலீசாரே காரணமாக இருந்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு, மே 4-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம், வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டதன் பின்னணியில் போலீசாரின் பங்கு குறித்த கேள்வியும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

போலீஸ் தகவல்: இதனிடையே, மணிப்பூரில் குகி பழங்குடி பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். | மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையில் ஈடுபட்டோரில் முக்கிய நபர் கைது

இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” என்று கொந்தளிப்புடன் தெரிவித்துள்ளது. | வாசிக்க > மணிப்பூர் கொடூரம் | “அரசு தவறினால், நாங்களே நடவடிக்கை எடுப்போம்” - உச்ச நீதிமன்றம் கொந்தளிப்பு

இதனிடையே, “எனது இதயம் வலியால் நிரம்பியுள்ளது. இந்தச் சம்பவம் எந்த ஒரு நாகரிக சமூகத்துக்கான அவமானம்” என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். அதை வாசிக்க > “மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது மன்னிக்க முடியாதது” - பிரதமர் மோடி வேதனை

ப.சிதம்பரம் கேள்வி: மணிப்பூர் குறித்து பிரதமர் மோடியை நினைக்கத் தூண்டியது எது என்று தனக்கு ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். | வாசிக்க > “மணிப்பூர் பிரச்சினையில் பிரதமர் மோடியின் மவுனத்தை கலைத்தது எது?” - ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அரசு வலியுறுத்தல்: மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி துன்புறுத்தி இட்டுச் செல்லும் வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிகுந்த அதிருப்தியைத் தரக்கூடியதாக இருப்பதாலும், இந்த விவகாரம் தற்போது விசாரணையில் இருப்பதாலும் இந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x