Published : 20 Jul 2023 02:56 PM
Last Updated : 20 Jul 2023 02:56 PM

மகாராஷ்டிராவில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேரின் உடல்கள் மீட்பு - மேலும் 15 பேர் நிலை குறித்து அச்சம்

மும்பை: மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ரெய்காட் மாவட்டம், காலாபூர் வட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த திடீர் நிலச்சரிவில் சுமார் 100 பேர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல் கிடைத்ததும் காவல் துறை, தீ அணைப்புத் துணை, தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இதுவரை 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலத்த காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் நவி மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 15 பேரின் உடல்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

"ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் பேசினேன். தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவர்கள் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை பத்திரமாக மீட்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்குவது ஆகியவையே எங்களின் முதன்மையாக குறிக்கோள்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்னாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இர்ஷல்வாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கிய சம்பவத்தை அறிந்து முதல்வர் மிகுந்த வேதனையை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு அவர் தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x