Published : 18 Jul 2023 04:44 AM
Last Updated : 18 Jul 2023 04:44 AM

ரூ.1.2 கோடி சம்பாதித்த ‘யூடியூபர்’ வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் தஸ்லிம். இவர் யூடியூப் சேனலில் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம், விற்பனை தொடர்பான பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார்.

இவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் யூடியூப் சேனல் மூலம் அவருக்கு ரூ.1.2 கோடி அளவுக்கு வருமானம் வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ.24 லட்சம் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக இந்தப் பணத்தை அவர் ஈட்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தஸ்லிமின் சகோதரர் பெரோஸ் கூறும்போது, “எனது சகோதரர் நடத்தும் யூடியூப் சேனல் மூலம் ரூ.1.2 கோடி வருவாய் வந்தது. இதற்காக நாங்கள் ரூ.4 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டோம். நாங்கள் வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை. நாங்கள் யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் நல்ல வருவாயை ஈட்டி வருகிறோம். இதுதான் உண்மை. சதித்திட்டம் தீட்டி வருமான வரிச் சோதனையை நடத்தியுள்ளனர்" என்றார்.

தஸ்லிமின் தாயார் கூறும்போது, “என் மகன் தஸ்லிம் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது தவறுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x