Published : 17 Jul 2023 08:00 AM
Last Updated : 17 Jul 2023 08:00 AM

மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் பரபரப்பு: ஆதரவாளர்களுடன் சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்

மும்பை: மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, அதிருப்தி தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார், தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் சேர்ந்து நேற்று திடீரென சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியும் - பாஜக.வும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (என்சிபி) சேர்ந்த எம்எல்ஏ.க்களுடன் கூட்டணியில் இணைந்தார் அஜித் பவார்.

அன்றைய தினமே அவர் துணை முதல்வராகவும் பதவியேற்றார். அவரது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். கட்சி தாவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்சிபி தலைவர் சரத் பவார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மையத்தில் என்சிபி தலைவர் சரத் பவாரை, அஜித் பவார் மற்றும் அமைச்சர்களாக பதவியேற்ற ஆதரவு எம்எல்ஏ.க்கள் அனைவரும் நேற்று திடீரென சந்தித்தனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பின் போது அஜித் பவார் தரப்பில் மூத்த தலைவர் பிரபுல் படேலும் உடன் இருந்தார். இவர் சரத் பவாரின் மிக நெருங்கிய நம்பகமான தலைவராக இருந்தார். தற்போது அஜித் பவார் பக்கம் சாய்ந்துள்ளார்.

இதுகுறித்து பிரபுல் படேல் கூறும்போது, ‘‘எங்கள் தலைவர், எங்கள் கடவுள் சரத் பவாரை சந்தித்தோம். அவரிடம் ஆசீர்வாதம் பெற வந்தோம். நாங்கள் முன்கூட்டியே நேரம் குறித்துவிட்டு வரவில்லை. நாங்களாகவே வந்து எங்கள் தலைவர் சரத்பவாரை சந்தித்தோம். நாங்கள் சொல்வதை எல்லாம் அவர் பொறுமையாக கேட்டுக் கொண்டார். பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் அனைவரும் அவரை பெரிதாக மதிக்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினோம்’’ என்றார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடந்துள்ளதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

சரத் பவாரின் மனைவி பிரதிபாவுக்கு பிரீச் கேண்டி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் அவர் கடந்த வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்னர் சில்வர் ஓக் பகுதியில் உள்ள சரத் பவார் வீட்டுக்கு சென்று பிரதிபாவை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். பிரதிபா மீது அஜித் பவார் மிகவும் மரியாதையும் பாசமும் வைத்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸுடன் திடீரென சேர்ந்து ஆட்சி அமைக்க முற்பட்டார் அஜித் பவார். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அந்த நேரத்தில் அஜித் பவாருக்கு ஆதரவாக பேசி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ள பிரதிபா வலியுறுத்தி உள்ளார். அதனால் பிரதிபாவை சந்தித்து அஜித் பவார் நலம் விசாரித்தார். இந்தச் சூழ்நிலையில், தற்போது சரத் பவாரையும் அவர் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x