Published : 12 Jul 2023 04:55 AM
Last Updated : 12 Jul 2023 04:55 AM

அமலாக்கத்துறை இயக்குநருக்கு 3-வது முறை பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: பதவி விலக உச்ச நீதிமன்றம் உத்தரவு

சஞ்சய் குமார் மிஸ்ரா

புதுடெல்லி: அமலாக்கத்துறை இயக்குநருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியது சட்ட விரோதம் என கூறிய உச்ச நீதிமன்றம் அவரை இம்மாதம் 31-ம் தேதியுடன் பதவி விலக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமலாக்கத் துறையின் இயக்குநராக சஞ்சய் குமார் மிஸ்ரா (63) கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது 2 ஆண்டு பதவிக்காலம் கடந்த 2020-ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. அப்போதே இதை எதிர்த்து ‘காமன் காஸ்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் அவர் பதவிக் காலம் முடிய 2 மாதங்கள்தான் இருந்தது. அதனால் பதவி நீட்டிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அப்போதே அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என கூறியிருந்தது.

இந்நிலையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (சிவிசி) சட்டம் மற்றும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி அமலாக்கத் துறை, சிபிஐ தலைவர்களுக்கு இரண்டாண்டு பதவி காலத்துக்குப் பின்பு மேலும் ஒராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது. இதன்படி மிஸ்ராவின் பதவிக் காலம் 2022 நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பரில் மிஸ்ராவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடுத்தனர். இந்த மனுக்களை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘அமலாக்கத்துறை இயக்குநர கத்தின் தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு 3-வது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பு சட்டவிரோதம். அவர் வரும் 31-க்குள் பதவியில் இருந்து விலக வேண்டும்’’ என்றனர்.

யார் இந்த மிஸ்ரா?: சஞ்சய் குமார் மிஸ்ரா 1984-ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரி. அமலாக்கத்துறையில் நியமிப்பதற்கு முன்பாக அவர் டெல்லி வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்தார். பொருளாதார நிபுணரான இவர் பல வழக்குகளை திறம்பட விசாரித்துள்ளார். இவர் அமலாக்கத் துறை இயக்குநரான பின் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் விசாரணையில் சிக்கினர். இதனால் அமலாகத் துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது என அவர்கள் குற்றம் சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x