Published : 11 Jul 2023 11:58 AM
Last Updated : 11 Jul 2023 11:58 AM

டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வேயில் காரும் - பள்ளி வாகனமும் மோதி விபத்து: 6 பேர் பலி

சிசிடிவியில் பதிவான விபத்து காட்சி

காசியாபாத்: டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வே சாலையில் காசியாபாத் அருகே நடந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் தலையில் ஏற்பட்ட படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தவறான பாதையில் வாகனத்தைச் செலுத்தியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது உறுதியான நிலையில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்தில் மாணவர்கள் யாரும் இல்லை. உயிரிழந்தவர்கள் எஸ்யுவி வாகனத்தில் வந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து ஏடிசிபி, ஆர்கே குஷ்வாஹா கூறுகையில், "விபத்துக்குள்ளான பேருந்து தவறான வழியில் வந்துள்ளது. டெல்லி காசிபூரில் சிஎன்ஜி நிரப்பிக் கொண்டு வந்த பள்ளிப்பேருந்து ஓட்டுநர், டெல்லியில் இருந்தே தவறான பாதையில் வந்துள்ளார். விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்தில் மாணவர்கள் யாருமில்லை. உயிரிழந்தவர்கள் காரில் வந்தவர்களாவர். காரில் இருந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கார் மீரட்டில் இருந்து டெல்லி குருகிராம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்து ஓட்டுநர் தவறான பாதையில் வந்ததால் விபத்து நடந்துள்ளது. அவரைக் கைது செய்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x