Published : 09 Jul 2023 04:14 AM
Last Updated : 09 Jul 2023 04:14 AM

சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14-ல் விண்ணில் ஏவப்படுகிறது - பொதுமக்கள் பார்வையிட இஸ்ரோ அழைப்பு

சென்னை: சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், இந்நிகழ்வைப் பார்வையிட பொதுமக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திராயன்-2 விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்டப் பயணங்களுக்கு பின்பு சந்திரயான்-2 கடந்த 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலம் 3,900 கிலோ எடை கொண்டது. இதில் 7 வகையான ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. லேண்டர் மற்றும் ரோவர் கலன்கள் 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

எல்விஎம் ராக்கெட் ஒருங்கிணைப்பு மற்றும் பரிசோதனைப் பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிட இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x