Published : 15 Jun 2023 03:54 AM
Last Updated : 15 Jun 2023 03:54 AM

இன்று கரையை கடக்கிறது பிப்பர்ஜாய் புயல் - குஜராத் நிவாரண பணிக்காக தயார் நிலையில் ராணுவ வீரர்கள்

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பிப்பர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்கும்என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் ஏற்படும் பகுதிகளில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரு கிராம மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு டிராக்டரில் வெளியேறினர். படம்: பிடிஐ

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் இன்று மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது இந்தப் புயல் கிழக்கு - மத்திய அரபிக்கடலில் போர்பந்தரின் தென்மேற்கு பகுதியில் இருந்து 350 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

பிப்பர்ஜாய் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், பலத்த சேதத்தை உருவாக் கும் என அஞ்சப்படுகிறது.

44,000 பேர் இடமாற்றம்: முன்னதாக, புயல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடிதலைமையில் ஆலோசனை நடந்தது.

இதன் தொடர்ச்சியாக, புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இருந்து 44,000 பேர் வெளியேற்றப் பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, மேற்கு ரயில்வே குறிப்பிட்ட ரயில்களின் சேவைகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x