Published : 27 May 2023 06:14 AM
Last Updated : 27 May 2023 06:14 AM

ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால் நெல்லையில் அழியும் நீர்வழித்தடங்கள்: மழைக் காலங்களில் பாதிப்புக்கு வழிவகுக்கிறது

திருநெல்வேலி வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையோரம் பராமரிப்பின்றி விடப்பட்ட கால்வாய்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோட வழியின்றி பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மற்றும் பாளையங் கோட்டை பகுதிகளில் அரைமணிநேரம் தொடர் மழை பெய்தாலே சாலைகளும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறிவிடுகின்றன. மழைநீரும், கழிவுநீரும் குளம்போல் பல்வேறு இடங்களில் தேங்கி சுகாதார சீர்கேடும் உருவாகிறது.

மழைநீர் வழிந்தோட சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் கால்வாய்கள் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், பெரும்பாலான கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், பல்வேறு இடங்களில் கால்வாய்களில் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வைத்திருப்பதாலும் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைவதும், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்வதுமாக பிரச்சினை நீடிக்கிறது.

திருநெல்வேலியில் நயினார்குளம், பாளையங்கோட்டையில் வேய்ந்தான்குளம், பேட்டை, பெருமாள்புரம், உடையார்பட்டி பகுதிகளில் உள்ள குளங்கள் என்று ஒருசில குளங்கள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. நகரமயமாக்கலின் விளைவாக கட்டுமானங்கள், சாலைகள் பெருகிவரும் நிலையில் இந்த குளங்களுக்கான நீர்வரத்து கால்வாய்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன.

தெற்கு புறவழிச்சாலையில் கால்வாய் இருந்ததற்கான அறிகுறியே தென்படாத
வண்ணம் மூடப்பட்டுள்ளது.

இதனால் மழை காலங்களில் இந்த குளங்களுக்கு வந்து சேகரமாக வேண்டிய தண்ணீர் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து வருகிறது. மாநகரில் புதிதாக சாலைகள் அமைக்கும் பகுதிகளிலும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்படவில்லை. அவ்வாறு அமைத்தாலும் அவற்றின் மேற்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கடைகளை அமைப்பதையும் பல்வேறு இடங்களில் காணமுடிகிறது.

ஒருகாலத்தில் குறிச்சி வழியாக கொக்கிர குளம் செல்லும் சாலையின் இருபுறமும் மிகவும் பசுமையாக காணப்படும் . ஆனால் தற்போது இந்த சாலையின் இரு ஓரங்களிலும் உள்ள நிலங்கள் தரிசாக காட்சியளிக்கின்றன. இந்த பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரும் ஓடைகள் தூர்ந்து காணப்படுகிறது. இந்த ஓடைகளில் திட்டமிட்டு கட்டிடக்கழிவுகளை கொட்டி நீர் வழிப்பாதையை அடைத்துள்ளனர்.

குறிச்சியிலிருந்து கொக்கிரகுளம் செல்லும் சாலையோர கால்வாய் கட்டிடக் கழிவுகளை
கொட்டி அழிக்கப்பட்டுள்ளது. படங்கள்: மு. லெட்சுமி அருண்

மேலப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மழைநீர் வேய்ந்தான்குளம் செல்லும் வகையிலான நீர்வழித்தடங்கள் உருத் தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த வழித்தடங்களில் வணிக நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலையின் இருபுறமும் நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பலஇடங்களில் வணிக வளாகங்களால் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.

இதுபோல் மாநகரில் முக்கிய சாலையோரங்களிலும் நீர்வழித்தடங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்படவில்லை. பல இடங்களில் அத்தகைய வழித்தடங்கள் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. இதனால் சிறிய மழைக்கே மாநகரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. பொறுப்புணர்வு இல்லாத வணிகர்கள், பொதுமக்கள், தொலைநோக்கு பார்வையில்லாத அதிகாரிகளால் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன. கால்வாய்களில் குப்பைகளை கொட்டுவதையும் தடுக்க முடியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x