Published : 20 May 2023 06:07 AM
Last Updated : 20 May 2023 06:07 AM

திருப்பத்தூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகள் பிலிக்கல் காப்பு காட்டில் விடுவிப்பு

திருப்பத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகளும் நேற்று ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பிலிக்கல் காப்புக்காட்டில் விடப்பட்டன.

கிருஷ்ணகிரி: திருப்பத்தூர் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 2 யானைகள், பிலிக்கல் காப்புக் காட்டில் விடப்பட்டன. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து 2 ஆண் யானைகள் கடந்த மார்ச் மாதம் வனப்பகுதியில் இருந்து வெளியேறின.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த இந்த இரு யானைகள், கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி பாரூர் அருகே காட்டுக்கொலை கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், ஏப்ரல் 21-ம் தேதி, தருமபுரி வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் (70), ஏப்ரல் 27-ம் தேதி காரிமங்கலம் பெரிய மொரசுப்பட்டியை சேர்ந்த வேடி (52) ஆகியோரை தாக்கி கொன்றன.

இதனைத் தொடர்ந்து கடந்த மே 6-ம் தேதி கிருஷ்ணகிரி நகருக்குள் புகுந்த யானைகள், 7-ம் தேதி காலை சாமந்தமலையில் பெருமாள் என்பவரை தாக்கி கொன்றன.

பின்னர், ஆந்திர மாநில வனப்பகுதிக்கு விரட்டப்பட்ட இரு யானைகள், கடந்த 12-ம் தேதி அங்கு ஒரு பெண் உட்பட இருவரை தாக்கி கொன்றன.

அங்கிருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தன. நேற்று முன்தினம் திருப்பத்தூர் அருகே திப்பசமுத்திரம் ஏரியில் இருந்த 2 யானைகளையும் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி, 3 கும்கி யானைகள் உதவியுடன் பிடித்தனர்.

பின்னர், யானைகள் லாரியில் ஏற்றப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட பிலிக்கல் காப்புக் காட்டில் நேற்று விடப்பட்டன.

லாரியில் இருந்து இறங்கியதும் 2 யானைகளும், வனப்பகுதிக்குள் சென்றன. இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், யானைகள் காட்டிற்குள் விடப்பட்டதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x