Published : 24 Apr 2023 06:28 AM
Last Updated : 24 Apr 2023 06:28 AM

சிவகளை பகுதியில் உயர்மின் கோபுரங்களால் அரிய வகை பறவைகள் அழியும் பரிதாபம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரங்களால் அரிய வகை பறவை இனங்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கி பறவைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சிவகளை காடு போதல் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப் பாளரான வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை கிராமத்தை சுற்றிலும் நீர் நிலைகள் மற்றும் வயல்வெளிகள் சூழ்ந்து காணப்படுவதால் அதிகமாக வெளிநாட்டு பறவைகளும், அரிய வகை இந்திய பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. குளங்களில் இரைதேடுவதற்கும், இனவிருத்தி செய்து கொள்ளவும் சிவகளை மேலகுளம், பெருங்குளம் பகுதி களுக்கு பறவைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.

இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் தென்மாவட்டங் களில் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவும், கூடுகட்டி , அடை காத்து குஞ்சு பொரிக்கவும் இப்பகுதிகளுக்கு பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன.

தமிழக வனத்துறையால் ஈரநிலம் என கண்டறியப்பட்டுள்ள இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் ஈரப்பதம் கலந்த காற்று வீசும். இந்த இதமான சூழலில் பறவைகள் இரை தேடி இங்கு அதிகம் வருகின்றன. இவ்வாறு வரும் பறவைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இப்பகுதிகளில் அமைக்க கூடாது என பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை.

இந்த நிலையில் இங்கு பறந்து வரும் பெரிய பறவைகளின் இறகுகள் மின்சார கம்பிகளில் பட்டு பறவைகள் இறந்து கிடக்கின்றன. பல பறவைகள் மின்சாரம் தாக்கிய நிலையில் வெகு தூரம் சென்றும் இறந்து கிடக்கின்றன. இந்தியாவில் ராஜஸ்தானில் மட்டும் காணப்படும் எகிப்து பருந்துகள் பல இங்கு காணப்படுகின்றன.

பல இறந்தும் கண்டறியப்பட்டுள்ளன. சிவகளை மற்றும் பெருங் குளம் பகுதிகளில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும். உயர் அழுத்த மின் கம்பிகளில் பறவைகள் திசைமாற்றி (Bird Diverter) அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x