Published : 20 Mar 2023 06:18 AM
Last Updated : 20 Mar 2023 06:18 AM

3 மாதங்களில் 14,020 முட்டைகள் சேகரிப்பு: தனுஷ்கோடி கடலில் மலர்தூவி விடப்பட்ட ஆமை குஞ்சுகள்

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில், கடந்த 3 மாதங்களில் 14,020 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்தனர். இதில் நேற்று 335 ஆமைக் குஞ்சுகள் மன்னார் வளைகுடா கடலில் மலர் தூவி விடப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் ஆமைகள் முட்டையிடும் இடமாக கன்னிராஜபுரம், மூக்கையூர், ஒப்பிலான், ஏர்வாடி, சேதுக்கரை, புதுமடம், மண்டபம், அரியமான், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை, பாம்பன், குந்துகால், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகள் கண்டறியப்பட்டன.

இப் பகுதிகளில் மீன் பிடிக்கும்போது, கடல் ஆமை பிடிபட்டால் மீண்டும் கடலில்விட ஏதுவாக மீனவர்களுக்கு வனத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் கடல் ஆமை முட்டையிடும் பகுதியில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கடந்த டிசம்பரில் இருந்து தற்போது வரை 3 மாதங்களில் தனுஷ்கோடி கடல் பகுதியில் 127 குழிகளிலிருந்து 14,020 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த முட்டைகள் நாய் மற்றும் பறவைகளால் சேதமடைவதை தடுக்கும் விதமாக அவற்றைச் சேகரித்து வனத் துறையினர் மீனவர்களின் உதவியுடன் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொறிப்பகங்களில் அடைகாத்துப் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் பொறிப்பகங்களில் முட்டைகளிலிருந்து வெளிவந்த 335 ஆமை குஞ்சுகளை ராமநாதபுரம் மாவட்ட வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் மேற்பார்வையில் மண்டபம் வனச்சரகர் மகேந்திரன். வனவர் தேவகுமார், வனக்காப்பாளர் மணிகண்டன் , வேட்டை தடுப்பு காவலர்கள் சிவக்குமார், கருப்பையா, கவின்குமார் உள்ளிட்டோர் நேற்று மலர் தூவி பாதுகாப்பாக கடலில் விட்டனர். இந்நிகழ்வை தனுஷ்கோடி வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x