Published : 10 Mar 2023 06:53 AM
Last Updated : 10 Mar 2023 06:53 AM

நீலகிரியில் அந்நிய தாவரங்களை அகற்றும் பணி தீவிரம்: முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் தகவல்

உதகை: மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் உலகிலுள்ள 14 முக்கிய உயிர்ச்சூழல் மண்டங்களில் ஒன்று.இதனால்,1986-ம் ஆண்டு நீலகிரியை உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோ அங்கீகரித்ததுடன், 2012-ம் ஆண்டு பாரம்பரிய சின்னமாகவும் அறிவித்தது. இதையடுத்து, பாரம்பரிய சின்ன அந்தஸ்தை பாதுகாக்க, நீலகிரி சோலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

முன்னதாக, 1840-லிருந்து நீலகிரிமாவட்டத்தில் கற்பூரம், சீகை உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட்டன. இவை இயற்கையின் சமநிலையை பாதித்ததால், 1988-ம்ஆண்டு வரையறுக்கப்பட்ட வனக்கொள்கையில், நீலகிரி சோலைகள் மற்றும் புல்வெளிகளை பாதுகாக்க வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து,கற்பூரம் மற்றும் சீகை மரங்கள்அகற்றப்பட்டு வருகின்றன. இப்பணிமிகவும் கடுமையானது. சீகை மரங்களை தொடர்ந்து மூன்றாண்டுகள் அப்புறப்படுத்தினால்தான், அவற்றை அழிக்க முடியும். வனத்தீ ஏற்பட்டால் சீகை விதைகள் உயிர் பெற்றுவிடும்.

நீலகிரி சோலைகளில் வெளிநாட்டு தாவரங்களான சீகை, கற்பூரம், உண்ணி, பார்த்தீனியம் ஆகியவை ஆக்கிரமித்துள்ளதால், உள்ளூர் தாவரங்கள் வளர முடியாமல் வனப்பகுதியில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும், வன விலங்குகளின் வாழ்விடங்கள் சுருங்கி, மனித-விலங்கு மோதல் அரங்கேறி வருகிறது.

எனவே, அந்நிய தாவர பெருக்கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்நிய தாவரங்களை அகற்றுவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

அதேசமயம், அந்நிய மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் பயன்படுத்தப்படும் நிதியை, இந்த திட்டத்துக்கு பயன்படுத்துமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, ஐந்தாண்டு திட்டமாக (பசுமையாக்கல் திட்டம்) 2013-14 ஆண்டிலிருந்து அந்நிய தாவரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரியில் மொத்தம் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் கற்பூரம், சீகை சோலைகள் உள்ளன. இவற்றை அகற்றும் திட்டத்தின் கீழ், முக்கூர்த்தி தேசிய பூங்கா, நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அப்பர் பவானி, வடக்கு சரகங்களில் சுமார் 150 ஹெக்டர் பரப்பிலான கற்பூரம் மற்றும் சீகை மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இது மொத்த பரப்பில் ஒரு சதவீதம் மட்டுமே. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா 78.4 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 40 சதவீதம் சீகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறியதாவது: முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட 40 சதவீத பகுதிகளில், லண்டனா களைச்செடிகள் பரவியிருக்கிறது. கடந்த ஆண்டு 350 ஹெக்டர் பரப்பில் லண்டனாசெடிகள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு 180 ஹெக்டர் பரப்பளவில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, சென்னா மரங்கள்சுமார் 1500 ஹெக்டர் பரப்பில் பரவியிருக்கிறது. தற்போது சுமார் 25ஹெக்டரில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

தெங்குமரஹாடா பகுதியில் இதுவரை 350 ஹெக்டர் பரப்பில் இருந்த புரோசோபிஸ் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அங்கு சுமார் 1500 மீட்டர் பரப்பில் புரசோபிஸ் பரவியிருக்கிறது. இந்த மரங்கள் அகற்றப்பட்டால், புல்வெளிகள் அதிகரிப்பதுடன், விலங்குகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x