Published : 16 Feb 2023 02:40 PM
Last Updated : 16 Feb 2023 02:40 PM
புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு பிப்.18-ம் தேதி சனிக்கிழமை 12 சிவிங்கிப் புலிகள் கொண்டு வரப்படுகின்றது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகளை மறுஅறிமுகம் செய்யும் செயல் திட்டத்தின ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது 72 வது பிறந்தநாளான கடந்த ஆண்டு செப்.17-ம் தேதி 8 சிவிங்கிப் புலிகளை இந்தியாவில் மறுஅறிமுகம் செய்து வைத்தார். இதற்காக, 5 பெண், 3 ஆண் சிவிங்கிப் புலிகள் ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.
தற்போது குனோ தேசிய பூங்காவில் அந்த எட்டு சிவிங்கிப்புலிகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. அவைகளில் ஒரு பெண் சிறுத்தையின் கிரியேட்டினின் அளவு அதிகரித்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அது நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும், ஆப்பிரிகாவில் இருந்து இந்தியாவின் குனோ தேசிய பூங்காவில் மீண்டும் அறிமுகம் செய்வது தொடர்பாக ஜனவரியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.
இதுகுறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகையில், பிப்வரி மாதத்தில் 12 சிவிங்கிப் புலிகள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்த 8 - 10 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 12 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இந்த ஒப்பந்தம் அதன் நிகழ்காலத் தேவையைப் பொறுத்து ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
இந்தியாவின் வனவிலங்குகள் ஆணையம் தயாரித்துள்ள, இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை மறுஅறிமுகம் செய்யும் செயல் திட்டத்தின் படி, இந்தியாவில் புதிய சிவிங்கிப்புலிகள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், முதல் ஐந்து ஆண்டு தோறும் 12 -14 சிவிங்கிப்புலிகள் தென்னாப்பிரிக்கா, நமீபியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும். அதன்பின்னர் தேவைக்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள 7,000 சிவிங்கிப்புலிகளில் பெரும்பாலனவை தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் போட்ஸ்வானவில் வசிக்கின்றன. நமீபியா உலகில் அதிக அளவிலான சிவிங்கிப்புலிகள் வாழும் நாடாகும்.
இந்தியாவில், வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக முற்றிலும் அழிந்து போன ஒரு பெரிய வேட்டை விலங்கு சிவிங்கிப்புலி மட்டுமே. சத்தீஸ்கர் மாநிலத்தின் கோரியா மாவட்டத்திலுள்ள சால் காட்டில் இருந்த சிவிங்கிப்புலி கடந்த 1948ம் ஆண்டு இறந்து போனது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment