Published : 09 Feb 2023 01:10 PM
Last Updated : 09 Feb 2023 01:10 PM

பரமத்திவேலூர் அருகே ஆட்டை கொன்ற சிறுத்தையை பிடிக்க கூடுதல் கூண்டு: வனத்துறையினர் நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே மேலும் ஒரு ஆட்டை கொன்ற சிறுத்தையைக் கூடுதல் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், கண்காணிப்புக் கேமரா எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தியுள்ளனர்.

பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சுடையாம் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆடு மற்றும் நாய்களை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதையடுத்து, அப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியிலிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தபோது, அது சிறுத்தையின் கால்தடம் என்பதும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதையும் உறுதி செய்தனர்.

இதையடுத்து, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உத்தரவின்பேரில், சிறுத்தையைப் பிடிக்க செஞ்சுடையாம் பாளையத்தில் கூண்டு வைக்கப்பட்டது. மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், வனச்சரகர், வனவர் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு செஞ்சுடையாம் பாளையத்தில் மீண்டும் ஆடு ஒன்றை சிறுத்தை கடித்து கொன்றது. இதனால், கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்கத் தருமபுரியிலிருந்து மற்றொரு கூண்டை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். மேலும், கூடுதலாக 6 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

இதனிடையே, சிறுத்தையின் நடமாட்டம் காரணமாக செஞ்சுடையாம் பாளைம் மற்றும் அருகே உள்ள வீரணம் பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பகல் வேளைகளிலும் சாலை மற்றும் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும், பொதுமக்கள் கதவுகளைப் பூட்டி வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கடந்த இரு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால், கிராம மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “சிறுத்தையை விரைந்து பிடிக்கவும், சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும்,பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x