Published : 08 Feb 2023 04:13 AM
Last Updated : 08 Feb 2023 04:13 AM

தேன்கனிக்கோட்டை, தளி வனப்பகுதியில் இருந்து தனித் தனியாக பிரிந்த யானைகளை ஒருங்கிணைக்க வனத்துறை நடவடிக்கை

பிரதிநிதித்துவப் படம்

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மற்றும் தளி வனப்பகுதியிலிருந்து பிரிந்து சென்ற யானைகளை ஒன்றிணைத்து அடர்ந்த வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்யும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து 200-க்கும் மேற்பட்ட யானைகள் தளி, ஜவளகிரி உள்ளிட்ட வனப்பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம் பெயர்ந்தன. இந்த யானைகள் தனித் தனியாகப் பிரிந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஓசூர் அடுத்த மத்திகிரி அரசு கால்நடை பண்ணையில் ஒற்றை யானை இருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது. வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 5 யானைகள் இருந்தன. யானைகளைப் பட்டாசு வெடித்து ஆனேக்கல் வனப்பகுதிக்கு வனத்துறையினர் இடம் பெயரச் செய்தனர்.

ஆனால் யானைகள் மீண்டும் கால்நடை பண்ணையில் தஞ்சம் அடைந்தன. இதேபோல, சானமாவு வனப்பகுதியில் 18 யானைகளும், கெலமங்கலம் அருகே ஒற்றை யானையும் தஞ்சம் அடைந்துள்ளன. தனித் தனியாகப் பிரிந்துள்ள யானைகளை ஒன்றிணைத்து அடர்ந்த வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்யும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, “யானை களை வனப்பகுதிக்கு இடம் பெயரச் செய்வது வனத்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. கூடுதல் வன ஊழியர்களை நியமித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x