Published : 31 Oct 2022 06:44 PM
Last Updated : 31 Oct 2022 06:44 PM

சோலார் மின் உற்பத்தியில் இந்தியாவுக்கு வழிகாட்டும் கேரளாவின் மாதிரி பஞ்சாயத்து: ஒரு விசிட்

பெரிங்ஞானம் கிராமத்தை பார்வையிட்ட தமிழக பஞ்சாயத்து தலைவர்கள்

சென்னை: கிராமம் முழுமைக்கும் தேவையான மின்சாரத்தை சோலார் மின் உற்பத்தி மூலம் பெற்று முன் மாதிரி கிராமமாக இருக்கும் கேரளாவின் பெரிங்ஞானம் பஞ்சாயத்தை தமிழகத்தைச் சேர்ந்த 37 பஞ்சாயத்து தலைவர்கள் பார்வையிட்டனர்.

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பெரிங்ஞானம் என்ற பஞ்சாயத்து உள்ளது. இதில் உள்ள மொத்தம் 727 வீடுகளிலும் சோலார் பொருத்தப்பட்டு சூரிய ஒளி மொத்தமாக 1.16 MW அளவிற்கு மின்சாரம் கிடைக்கிறது. பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். பெரிங்ஞானம் பஞ்சாயத்து தலைவர் சச்சித் இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மின் நுகர்வோர் குழுவை உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து கேரளா மாநில மின்சார வாரியத்தின் துணையோடு இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதை செயல்படுத்த மத்திய அரசின் மானியம், மக்களில் வசதி படைத்தவர்களின் முதலீடு, வசதி இல்லாத மக்களுக்கு கூட்டுறவு வங்கியின் கடன் பெற்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

727 வீடுகளுக்கு சோலார் வசதி அமைக்க ரூ.3.31 கோடி செலவு ஆகியுள்ளது. இதன்மூலம் தேவையான மின்சாரம் கிடைத்த காரணத்தால் இந்த கிராம மக்கள் அரசிடம் இருந்து மின்சாரம் பெறவில்லை. இந்த மின்சாரம் கட்டணத்தின் மூலம் அவர்கள் முதலீடு செய்த தொகை 4 ஆண்டுகளில் அவர்களுக்கு திரும்பி கிடைத்து விட்டது. மேலும், அடுத்த 21 ஆண்டுகளுக்கு சூரிய ஆற்றலில் இருந்து பெறப்போகும் மின்சாரம் இவர்களுக்கு இலவசமாக கிடைக்கும்.

இதுகுறித்து அறிந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பெரிங்ஞானம் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் சச்சித்தை, இத்திட்டம் குறித்து தமிழ்நாடு மாநில திட்டக்குழுவிடம் விளக்குமாறு அழைந்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த மே மாதம் பூவுலகின் நண்பர்கள் குழுவினருடன், சச்சித் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவினரிடம் இத்திட்டம் குறித்த விபரங்களை எடுத்துக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பெரிங்ஞானம் பஞ்சாயத்தின் மாதிரியை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு மாநில திட்டக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதனை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களில் இருந்து 37 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட 45 பேரை தேர்வு செய்து கடந்த அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெரிங்ஞானம் கிராமத்தை நேரில் பார்வையிட கேரளாவுக்கு அனுப்பியது ஊராட்சித் துறை.

இந்த நிகழ்வில் பெரிங்ஞானம் பஞ்சாயத்து அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் டைசன், பெரிங்ஞானம் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்தத் திட்டத்திற்கு கடனுதவி வழங்கிய கூட்டுறவு வங்கியின் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பில், சூரிய ஆற்றலின் தேவைகள், திட்டத்தினை நடைமுறைப்படுத்த தாங்கள் எடுத்த முயற்சிகள், அதில் சந்தித்த சவால்கள் மற்றும் தற்போதைய வெற்றிகரமான நிலை ஆகியவற்றைக் குறித்து பெரிங்ஞானம் மக்கள், தமிழ்நாட்டு பஞ்சாயத்து தலைவர்களிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களை சேர்ந்த 37 பஞ்சாயத்து தலைவர்கள் தாங்களும் தங்கள் பஞ்சாயத்தில் இதுபோன்று சூரிய ஆற்றல் மின்சார திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x