Published : 08 Aug 2024 03:43 PM
Last Updated : 08 Aug 2024 03:43 PM

கொடைக்கானல், ஊட்டிக்கு ‘வயநாடு’ தந்த எச்சரிக்கை? - ஒரு சூழலியல் பார்வை

சுற்றுலாப் பயணிகளை கவரும் கொடைக்கானல் மலைப்பகுதியின் ரம்மியமான தோற்றம்.

மதுரை: கேரள மாநிலம் வயநாடு போன்று பெரும் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கொடைக்கானல், ஊட்டியில் தொலைநோக்குத் திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை போன்ற மலை கிராமங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியும், பாறைகள், கற்கள் தாக்கியும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வயநாடு கேரளாவின் முக்கியச் சுற்றுலாத் தலமாக திகழ்வதால் ஏராளமான சுற்றுலா விடுதிகள் மலைச்சரிவுகளில் கட்டப்பட்டிருந்தன. கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் வயநாடு செல்வது உண்டு. வாகனங்கள் சென்று வரு வதற்காக புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இப்படி வனத்தை அதன் இயல்புக்கு மீறி சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் போர்வையில் அழித்ததாலேயே இந்த முறை தென்மேற்கு பருவமழைக்கு மண் தன்னுடைய பிடிமானத்தை விட்டதால் அதன் இடைவெளி விரிசல்களில் மழைநீர் புகுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வயநாட்டைப்போல், தமிழகத்தில் கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு, ஊட்டி, கொல்லி மலை போன்ற முக்கிய கோடை வாசஸ்தலங்ளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

கொடைக்கானல், சிறுமலை, ஏற்காடு, ஊட்டியில் சுற்றுலா விடுதிகள், விஐபிகள் பண்ணை வீடுகள், குடியிருப்புகள் எண் ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. ஆழ்துளைக் கிணறுகள், முறைகேடாக அமைக்கப்படுகின்றன. கொடைக்கானல், சிறுமலை போன்ற கோடை வாசஸ்தலங்களில் ஒவ்வொரு சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருவதற்கான சாலை வசதிகள் ஏற்படுத்தப் படுகின்றன.

கொடைக்கானல் மலைச்சாலையில் அடிக்கடி பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்படும். சிறு சிறு விபத்துகள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன. கொடைக்கானலில் 1993-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தை மீறி கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அந்தக் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் தொடர்ந்து விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கின்றன. அதுபோல், தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்தால் போடி மெட்டு மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழு கின்றன. மண் சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த விபத்துகள், மண் சரிவுகளை திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகங்கள் தமிழக அரசின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு அதைத் தடுக்க பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில் வளர்ச்சியை மட்டுமே சிந்திக்காமல் வயநாடு போன்று பேரழிவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என தமிழக அரசு விழித்துக் கொண்டு முக்கிய கோடை வாசஸ்தலங்கள் உள்ள மாவட்ட நிர்வாகிகளை அறிவுறுத்தி அதற்கான சூழலியல் சார்ந்த தொலைநோக்குத் திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது சூழலியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டுப்பாடின்றி மலைப் பகுதியில் குடியேறும் மக்கள்: சுற்றுச்சூழல் ஆர்வலர் அருண்குமார் கூறியதாவது: நீலகிரியில் காடுகளை அழித்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. மலை சரிவுப்பாதைகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், மலைச் சரிவுப்பகுதிகளில் கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

குறிப்பிட்ட மக்கள் வசிப்பதற்கே கொடைக்கானல், ஊட்டியில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இன்று கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. மற்ற நகரங்களைபோல், கொடைக்கானல், ஊட்டியில் மக்கள் குடியேறி வருகிறார்கள். கொடைக்கானலில், எலிவால் அருவி வியூ பாயிண்ட் பகுதியில் 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. சித்தரேவு - தடியன் குடிசை செல்லும் வழியில் ஆண்டுதோறும் நிலச்சரிவு ஏற்படுகிறது, மூணாறு, குமுளி போன்ற இடங்களில் புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.

ஆனால், இதுபோன்ற கடினமான விதிமுறைகள், கொடைக்கானல், ஊட்டியில் பின்பற்றுவது கிடையாது. புதிதாக வீட்டுமனைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது. வயநாடு நமக்கு மிகப்பெரிய எச்சரிக்கை கொடுத்துள்ளது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x