Last Updated : 24 Jul, 2024 09:41 PM

1  

Published : 24 Jul 2024 09:41 PM
Last Updated : 24 Jul 2024 09:41 PM

பில்லூர் அணையின் மதகுப் பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்: நீர்நிலை மாசடையும் அபாயம்

பில்லூர் அணையின் மதகுப் பகுதியில் பரவிக் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்

கோவை: பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் பில்லூர் அணையின் நீர்நிலை மாசடைகிறது. நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் அருகே, பில்லூரில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. பில்லூர் அணை மற்றும் அதையொட்டியுள்ள பவானி ஆற்றினை மையப்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இந்த அணை கொண்டுள்ளது.

பில்லூர் அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம் 100 அடி ஆகும். அணையில் 97.5 அடியை நீர்மட்டம் கடந்தால், அணை நிரம்பியதாக கருதப்படும். தொடர்ந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படும். பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தினமும் 3 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கனஅடி நீர் விநாடிக்கு வெளியேற்றப் படுகிறது.

இதைப் பயன்படுத்தி தினமும் 100 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபத்தில் தொடர் மழையின் காரணமாக பில்லூர் அணை நிரம்பியது. இதனால் கடந்த 16-ம் தேதி முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பில்லூர் அணையில் இருந்த உபரி நீர், பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அச்சமயத்தில் அணையில் மதகுகள் உள்ளிட்ட இடங்களில் பல மடங்கு பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் காணப்பட்டன.

இது குறித்து சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, "அணைக்கு நீர் வரும் வழித்தடங்கள், நீரோடைகள், காட்டாறுகள் உள்ளிட்ட இடங்களில் சில மக்களால் பிளாஸ்டிக் பாட்டில்கள், வாட்டர் கேன்கள் உள்ளிட்ட பொருட்கள் போடப்படுகின்றன. நீரோடைகள் மற்றும் வனத்தை ஒட்டிய சொகுசு தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் மழைக்காலங்களில் இந்த நீரோடைகளில் அடித்து வரப்படுகின்றன.

மேற்கண்ட கழிவுகள் அனைத்தும் பில்லூர் அணையின் மதகு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேங்கிக் காணப்படுகிறது. மரம், இலைக் கழிவுகள் என பலவகை கழிவுகள் இருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் காணப்படுகின்றன. இது தொடர்வதை தடுக்க நீரோடை, காட்டாறு வரும் வழித் தடங்களில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என சமூக செயல்பாட்டாளர்கள் கூறினர்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, "பில்லூர் அணைக்கு நீர் வரத்து உள்ள வழித் தடங்களை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் கட்டிடங்கள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் கழிவுகள் அடித்து வரப்பட்டு, அணையில் மிதந்தன. அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் போது, அக்கழிவுகளும் வெளியேறி விடுகிறது. நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை போடக்கூடாது என பொதுமக்களுக்கும் சுய விழிப்புணர்வு அவசியம் இருக்க வேண்டும்" என அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x