Published : 24 Jul 2024 05:14 PM
Last Updated : 24 Jul 2024 05:14 PM

தமிழகத்தில் 12 ராம்சர் தளங்களின் முப்பரிமாண வரைபடம் - நவீன ட்ரோன்களை பயன்படுத்தி தயாரிப்பு

ராமேசுவரம்: தமிழகத்தில் 12 ராம்சர் தளங்களில் நவீன ட்ரோன்களை பயன்படுத்தி முப்பரிமாண வரைபடங்களைத் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. ஈர நிலங்கள் பூமியின் பச்சை நுரையீரல்கள் என்று அழைக்கப்படுகின்றன. 1971 பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சர் நகரில், பல்வேறு நாடுகள் கலந்துகொண்ட `ஈரநிலங்கள் பாதுகாப்பு மாநாடு' நடைபெற்றது.

இந்த மாநாட்டில், உலகம் முழுவதும் உள்ள ஈர நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தைப் பொதுமக்களிடம் கொண்டு சென்று, உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவிலான திட்டங்களை உருவாக்கி, ஈர நிலங்களைப் பாதுகாக்கும் வகையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கு ராம்சர் ஒப்பந்தம் என்று பெயர். இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் ராம்சர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால், ஈர நிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளை இந்தியாவும் கடைப்பிடித்து வருகிறது.

இந்தியாவில் 27,403 சதுர கிலோமீட்டர் ஈர நிலப்பரப்பு அமைந்துள்ளது. அதில் 80 சதவீத ஈர நிலங்கள், அலையாத்திக் காடுகளாக உள்ளன. இந்தியாவில் 80 சதவீத ஈர நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடாவில் உள்ள குருசடைதீவு.

தமிழகத்தில் கோடியக்கரை, கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரணை சதுப்புநிலக்காடு, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு, கூந்தன்குளம், வேம்பனூர் சதுப்பு நிலம், வெள்ளோடை, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம், சுசீந்திரம் தேரூர் சதுப்பு நில வளாகம், வடுவூர் பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், லாங்வுட் சோலை காப்புக் காடுகள், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்கோளக் காப்பகம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் ஆகிய 16 ஈர நிலங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 12 ராம்சர் தளங்கள் தொடர்பாக, நவீன ட்ரோன்கள் மூலம் டிஜிட்டல் முறையில் வரைபடங்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

ஈரநிலங்களுக்கு வலசை வரும் பிளமிங்கோ பறவைகள்.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம், தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் ஆகியவை இணைந்து, தமிழகத்தில் உள்ள 12 ராம்சர் தளங்களில் உயர் தொழில்நுட்ப ட்ரோன்களைப் பயன்படுத்தி, முப்பரிமாண வரைபடங்கள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இந்த ஈர நிலங்கள் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு வாழ்விடங்களாகவும், பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு மட்டுமின்றி நிலத் தடி நீர் அதிகரிப்புக்கும் உதவுகின்றன. தூர்வாருதல், களைச் செடிகளை அகற்றுதல், வறட்சி, வெள்ள மேலாண்மை உள்ளிட்ட காலங்களில் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்க, முப்பரிமாண வரைபடங்கள் உதவியாக இருக்கும்.

மேலும், ஈர நிலங்களில் ஆக்கிரமிப்புகள் நடைபெறாமல் தடுப்பது, அங்குள்ள நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்காமல் தடுப்பது, குப்பை கொட்டாமல் தடுப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x