Published : 20 Jul 2024 05:53 PM
Last Updated : 20 Jul 2024 05:53 PM

காரைக்குடி மக்களின் ஜீவன் சம்பை ஊற்று - 3000 ஆண்டுகள் பழமை!

காரைக்குடி: காரைக்குடியில் வற்றாத சம்பை ஊற்று காரணமாக அப்பகுதி மக்கள் 90 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டை கண்டதில்லை. இப்பகுதியில் சம்பைப் புற்கள் நிறைந்திருப் பதால் சம்பை ஊற்று என்று அழைக்கப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலேயே 1932-ல் சம்பை ஊற்றுப் பகுதியில் காரைக்குடி குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 4 ஏக்கரில் 17 ஆழ்துளைக் கிணறுகளுடன் செயல்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 75 லட்சம் முதல் ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. எனினும் வற்றாத நீராதாரமாகவே இருந்து வருகிறது. மொத்தம் 1.50 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது. கடந்த காலங்களில் தினமும் இருவேளை விநியோகிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒருவேளை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் ஊற்றில் இருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்து வருவதாகக் கூறப் படுகிறது. இதனால் சம்பை ஊற்றை முறையாகப் பராமரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருஞானம் கூறியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சம்பை ஊற்று காரைக்குடி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். சம்பை ஊற்றைச் சுற்றிலும் 500 மீ. தூரத்துக்கு கட்டிடங்கள் கட்ட தடை உள்ளது. ஆனால், தற்போது அதைச் சுற்றிலும் வணிக நிறுவனங்கள், ஆலைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் நிலத்தடி நீரின் தன்மை மாறி நீரின் சுவையும் குறைந்து வருகிறது. அதோடு சம்பை ஊற்றில் இருந்து கிடைக்கும் நீரின் அளவும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. சம்பை ஊற்றை காக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சம்பை ஊற்றில் இருந்து தண்ணீர் தொடர்ந்து எடுப்பதைக் குறைக்கும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் காரைக்குடி மாநகராட்சி இணைக்கப்படுகிறது’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x