Last Updated : 12 Jul, 2024 05:50 PM

 

Published : 12 Jul 2024 05:50 PM
Last Updated : 12 Jul 2024 05:50 PM

கோவை வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள் வனத்தில் விடுவிப்பு

கோவை: கோவை மாவட்டம் வஉசி வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 5 கடமான்கள் சிறுவாணி வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டன.

கோவை வஉசி வன உயிரியல் பூங்காவுக்கு உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசால் மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பூங்காவில் பராமரிக்கப்படும் அட்டவணை வன உயிரினங்களை வனப்பகுதியில் விடுவித்திட சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணை பிறப்பித்தனர். கோவை வஉசி உயிரியல் பூங்காவில் இருக்கும் அட்டவணை வன உயிரினங்களை மாற்றம் செய்திட தமிழக வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வஉசி பூங்காவில் பராமரிக்கப்பட்ட புள்ளி மான்கள் கடந்த மே மாதம் மாற்றம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கடமான்களை மாற்றம் செய்ய திட்டமிட்டு அதன் புழுக்கைகளை வண்டலூரில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அவற்றுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது. பின்பு மார்ச் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சை தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகள் தரப்பட்டு வந்தது.

இதையடுத்து, கடந்த ஜூலை 4-ம் தேதி ஐந்து கட மான்கள் போலம்பட்டி சரக காப்புக் காட்டில் விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலம்பட்டி வன பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் 5 கடமான்கள் பிரத்யேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் இன்று விடுவிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள், "வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்" என அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x