Last Updated : 28 May, 2024 06:45 PM

 

Published : 28 May 2024 06:45 PM
Last Updated : 28 May 2024 06:45 PM

புதுப்பட்டினம் கடற்கரையில் கவனம் ஈர்த்த கடல்பசு மணற்சிற்பம் | சர்வதேச கடல்பசு தினம்

புதுப்பட்டினம் கடற்கரையில், சர்வதேச கடல்பசு தினத்தைக் கொண்டாடும் வகையில் கடற்பசு மணற்சிற்பம் மற்றும் அதனைச் சுற்றி மனித சங்கிலி.

தஞ்சாவூர்: சர்வதேச கடல்பசு தினத்தை முன்னிட்டு புதுப்பட்டினம் கடற்கரையில் கடல்பசு மணற்சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில், சர்வதேச கடல்பசு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு வனத்துறை, தஞ்சாவூர் வனக்கோட்டம் சார்பில், கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மே 28) நடைபெற்றது.

மனோராவை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அத்துடன், தங்களின் வலையில் சிக்கும் கடல்பசுவை உயிருடன் மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கி பாராட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் சுமார் 30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழுவினர் சுமார் 1 மணி நேரம் 30 நிமிடத்தில் தத்ரூபமாக உருவாக்கினர். தொடர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து கடல்பசுவை பாதுகாப்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காப்பாற்றி கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து, வெளிவயல் கிராமத்தில், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் 9 பேருக்கு வனத்துறை சார்பில் ரூ.27 ஆயிரம் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி பேசுகையில், ''தஞ்சாவூர் மாவட்டம் மனோராவை தலைமையிடமாகக் கொண்டு, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை அமைக்க உள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அருகி வரும் ஒரு அரிய கடல்வாழ் பாலூட்டி உயிரினமாக கடற் பசு உள்ளது. அவற்றின் வாழ்விடமான கடல் தாழைகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

வனத்துறையினர் உருவாக்கிய மணல் சிற்பம் முன் மனிதச் சங்கிலி அமைத்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடல் பசு. கடல் பசு பாதுகாக்கப்பட்டால் கடல் வளம் பாதுகாக்கப்படும். அதன் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் காப்பாற்றப்படும். நடப்பாண்டில் 3 கடல் பசு மற்றும் 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு மீனவர்களால் கடலில் விடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வனத்துறை சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

இந்த நிகழ்வில், உதவி வனப்பாதுகாவலர் சாந்தவர்மன், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மண்டல கணக்கு அலுவலர் பூபாலன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், இந்திய வனவிலங்கு நிறுவன ஆராய்ச்சியாளர் சுவேதா, உதவி ஆராய்ச்சியாளர் அஜித்குமார், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் ஜெயபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மீனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், மாணவ - மாணவியர் மீன்வளத்துறை சாகர் மித்ரா பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x