Published : 29 Jan 2024 06:27 PM
Last Updated : 29 Jan 2024 06:27 PM

குறைந்து வரும் வெலிங்டன் ஏரியின் நீராதாரம்: நீர்பிடிப்பை அதிகப்படுத்த தூர்வாரப்படுமா?

வெலிங்டன் ஏரி

கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் ஏரியின் நீராதாரம் குறைந்து வருகிறது. ஏரியை தூர்வாரி நீர்பிடிப்பை அதிகமாக்க வேண்டும், கரை பாதிப்பு மற்றும் நிரந்தர நீர்வரத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமத்தில் வெலிங்டன் ஏரி உள்ளது. இந்த ஏரி அமைக்கும் பணி 1913-ம்ஆண்டில் தொடங்கி 1923-ம் ஆண்டு முடிவ டைந்தது. இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ. கரையின் நீளம் 4,300 மீட்டர். ஏரியின் முழு கொள்ளளவு 2,580 மில்லியன் கனஅடி.

இந்த ஏரி மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம் மாவட்டம், கல்வராயன் சேர்வராயன் மலைத் தொடர்களில் இருந்து உருவாகும் வசிஷ்டா நதியானது, பெரம்பலூர் மாவட்டம்பச்சைமலையில் உருவாகும் ஸ்வேதா நதியுடன் இணைந்து கடலூர் மாவட்ட எல்லைக்குள் வெள்ளாற்றில் கலக்கிறது.

வெள்ளாற்றின்குறுக்கே தொழுதூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் வழியாக வெலிங்டன் ஏரிக்கு தண்ணீர் வருகிறது. மேலும், ஏரியை சுற்றியுள்ள ஓடை களின் வழியாக மழைநீரும் வந்தடைகிறது. இந்நிலையில் நீர்த்தேக்கத்தின் கரை கடந்த 1996-ம் ஆண்டு உள்வாங்கியது.

இதையடுத்து அணைப் பாதுகாப்பு குழு பரிந்துரையின்பேரில் உலக வங்கி நிதியின் கீழ் ரூ.5 கோடி செலவில் செப்பனிடப்பட்டது. இருந்தும் கரை உள்வாங்குவது ஒவ்வொரு பருவமழையின் போதும் தொடர்கதையாக இருந்ததால், 2007-ம் ஆண்டு புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டில் ரூ.29.71 கோடி செலவில் கரை புனரமைக்கப்பட்டது. அதன்பின் 2011-ம்ஆண்டு முதல் ஏரியில் நீர்பிடிக்கப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து சில ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால் நீர்பிடிப்பின்றி ஏரி வறண்ட நிலையில் காணப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு வெலிங்டன் ஏரியின்ஷெட்டர்கள், கரை சீரமைப்பு உள்ளிட்டவை ரூ.6.5 கோடி செலவில் செய்யப்பட்டது. இந்த பணிகள் முடிந்து அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரையின் 1,600-வது மீட்டரில் 15 மீட்டர் நீளம், 3 மீட்டர் ஆழத்துக்கு வெடிப்பு ஏற்பட்டு உள்வாங்கியது.

தொடர்ந்து நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி கரை உள்வாங்கிய இடத்தில், தற்காலிகமாக ரூ.1.48 கோடி செலவில் ரிங் வளைவு அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வெலிங்டன் ஏரியின் கரை பராமரிப்பு, அணை மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து மத்திய நீர்வள ஆணையக் குழுவினரும் நீர்த்தேக்கத்தின் கரையை ஆய்வு செய்தனர். ஆனால் கரை மேம்பாட்டுக்காக எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் அப்பகுதி விவ சாயிகள் விரக்தியில் உள்ளனர்.

கடந்த 1997-ம் ஆண்டு முதல் கரையில் விரிசல் ஏற்படுவதும், உள்வாங்குவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த ஏரி மூலம் கிடைக்கும் நீரை நம்பியே திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. கரை பலமிழந்ததால் முழு கொள்ளளவு நீர்பிடிக்க முடியாமல் விவசாயமும் முழு மையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டன் ஏரிக்கரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், நீர்வரத்துக்கு அரசு கூடுதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகள் மற்றும்பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை களாக உள்ளது.

இதுதொடர்பாக விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், “வெலிங்டன் ஏரி உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துவிட்டது. நீர்தேக்கத்தில் நீரை தேக்க நிறுத்தக்கூடிய முக்கிய பகுதியை முழுமையாக சீரமைத்தால் மட்டுமே கரை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். காவிரி நீரை வெள்ளாற்றில் இணைக்கும் திட்டத்துக்கு வடிவம் கொடுத்தால், வெலிங்டன் நீர்தேக்கம் மட்டுமின்றி கடலூர் மாவட்டமே செழிப்பாகும்.

25 ஆண்டுகளாக போதிய நீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை தூர்வாரி நீர்பிடிப்பை அதிகமாக்க வேண்டும். கரை பாதிப்பு மற்றும் நிரந்தர நீர்வரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x