Published : 17 Dec 2023 04:12 AM
Last Updated : 17 Dec 2023 04:12 AM

திருப்புவனம் அருகே 18 ஆண்டுகளாக வறண்டு கிடக்கும் 6 கண்மாய்கள்: தரிசான 800 ஏக்கர் விளைநிலங்கள்

சீமைக்கருவேல மரங்கள் மண்டி காணப்படும் இலந்தைக்குளம் கண்மாய்.

திருப்புவனம்: திருப்புவனம் அருகே 6 கண்மாய் கள் 18 ஆண்டுகளாக வறண்டும், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் காணப்படுகின்றன. இதனால் 800 ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன.

திருப்புவனம் அருகே இலந்தைக் குளம் ஊராட்சியில் இலந்தைக் குளம் கண்மாய், வண்ணன்குளம், பெரிய கொள்ளேரி, சின்ன கொள்ளேரி, இடையர்குளம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய் என 6 கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்கள் மூலம் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அப்பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக எதிர்பார்த்த மழை இல்லை.

இதனால் 6 கண்மாய்களிலும் போதிய தண்ணீர் தேக்க முடியவில்லை. கண்மாய்கள் தூர்வாராமல் வறண்டும், சீமைக் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்தும் காணப்படுகின்றன. இதனால் 800 ஏக்கர் விளைநிலங்களும் தரிசாக விடப்பட்டுள்ளன. இந்த 6 கண்மாய்களுக்கு கால்வாய் மூலம் வைகைஆற்று நீரை கொண்டுவர வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் மச்சக்காளை, விவசாயி மூக்கன் ஆகியோர் கூறியதாவது: எங்கள் பகுதி வானம் பார்த்த பூமி. போதிய மழை பெய்யாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. கிணறு, பம்புசெட் மோட்டார் வைத்துள்ள சிலர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். கண்மாய்களை நம்பியுள்ள பெரும்பாலான விளைநிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளன.

6 கண்மாய்களுக்கும் வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என 45 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x