Published : 15 Nov 2023 06:39 PM
Last Updated : 15 Nov 2023 06:39 PM

கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஆகாயத் தாமரை செடிகள்: வைகை ஆற்றை பராமரிக்க நிதி இல்லையா? 

வைகை நதியில் பரவியுள்ள ஆகாயத் தாமரை செடிகள்.

மதுரை: மதுரை வைகை ஆற்றில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஆகாயத் தாமரை செடிகள் உள்ளன. அவற்றை அகற்ற நிதி இல்லாமல் பொதுப்பணித் துறை தடுமாகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை வைகை ஆற்றில் அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே தற்போது தண்ணீர் வருகிறது. அதுவும் கடந்த காலத்தை போல் இரு கரைகளையும் தொட்டப்படி கரைபுரண்டு ஓடுவதில்லை. ஆற்று வழித்தடங்கள் முழுவதும் தண்ணீர் உருண்டோடுவதற்கான வண்டல் மண் கொள்ளையடிக்கப்பட்டு தற்போது பாதாள பள்ளங்களும், மேடுகளும் காணப்படுகின்றன. அதனால், அணையில் தண்ணீர் திறந்தாலும் மதுரையை தாண்டுவதே சிரமமாக உள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை கேரளாவை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைகளில் தீவிரமடைந்துள்ளது. அதனால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து தற்போது 71 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் உபரிநீர், பாசன கால்வாய்களில் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்னும் அணையில் இருந்து வைகை ஆற்றில் நேரடியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. மழை இன்னும் தீவிரமடைந்தால் எந்த நேரத்திலும் வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக பொதுப்பணித் துறையினர் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் நடவடிக்கை தொடங்கினர்.

ஆனால், மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு பருவமழை தற்போது குறைந்தால் அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுவதற்கான சூழலும் குறைந்துள்ளது. அதனால், வைகை ஆற்றில் ஆகாயதாமரைச் செடிகளை அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக பொதுப்பணித் துறை நிறுத்தி வைத்துள்ளனர். ஆற்றை முறையாக பராமரித்து ஆகாயதாமரைச் செடிகளை வளரவிடாமல் தடுத்திருந்தாலே கடந்த சித்திரைத் திருவிழாவில் உயிர் பலிகளை தடுத்து இருக்கலாம். தற்போது பருவமழை பெய்யும் இதுபோன்ற நேரங்களில் இவ்வளவு அதிகமாக ஆகாயதாமரைச் செடிகள் வைகை ஆற்றில் இருக்கவும் வாய்ப்பில்லாமல் போய் இருக்கும். அந்த பராமரிப்பை பொதுப்பணித் துறை கைவிட்டதால் தற்போது மதுரை வைகை ஆற்றில் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஆகாயத் தாமரைச் செடிகள் உள்ளன.

வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், ''தண்ணீர் வரும் முன்பே ஆகாயதாமரைச் செடிகளை அகற்றாததால் கல்பாலம் கீழே வரும் ஆகாயத் தாமரைகளை மட்டும் தற்காலிகமாக பொதுப்பணித் துறை அகற்றி தற்காலிகமாக அகற்றி உள்ளனர். மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர், மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி போதிய நிதி ஒதுக்கி பொதுப்பணித் துறை மற்றும் மாநகராட்சி ஒருங்கிணைந்து வைகை ஆற்றில் நிறைந்து இருக்கும் ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றலாம். ஆனால், அத்தகைய கூட்டு முயற்சி மதுரையில் இல்லாததால் வைகை ஆறு, பாழாகி கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி பெயரில் ரூ.350 கோடிக்கு மேல் நிதியை ஒதுக்கி ஆற்றின் இரு புறமும் போட்ட சாலைகள் முடிவுபெற வில்லை. அதனால், அந்த சாலை போட்டத்தின் நோக்கமே நிறைவேறாமல் நகரில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சாலை போடுவதற்கு ஒதுக்கிய நிதியில் சிறிதளவு ஆற்றை பராமரிக்க ஒதுக்கியிருக்கலாம். ஆனால், அப்படி செய்யாததால் பொதுப்பணித் துறையும் தொடர்ச்சியாக ஆற்றை பராமரிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றும் பணி நிறுத்தப்படவில்லை. நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x