Last Updated : 09 Sep, 2023 02:01 PM

 

Published : 09 Sep 2023 02:01 PM
Last Updated : 09 Sep 2023 02:01 PM

19 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை காக்க போராடும் ‘ஆணி மனிதன்’ சுபாஷ் சீனிவாசன் - சிறப்பு சார்பு ஆய்வாளரின் மறுபக்கம்

ராமநாதபுரம்: கடந்த 19 ஆண்டுகளாக சுற்றுச்சூழலை காக்க தனியொருவனாக பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஒருவர். ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் எஸ்.சுபாஷ் சீனிவாசன் (46). இவர் 2004-ம் ஆண்டு முதல் பணி ஓய்வு நேரத்தில் ஆதர வற்ற சடலங்களை மீட்டு அடக்கம் செய்வது, மனநிலை பாதித்தவர்களுக்கு முடி திருத்தம் செய்து உணவளிப்பது, மரங்களில் விளம்பரப் பலகைகளுடன் அடிக்கப்படும் ஆணிகளை அகற்றுவது, பொது இடங்களில் மரக்கன்று நட்டு பாதுகாப்பது உள்ளிட்ட சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தேவிபட்டினத்தில் தனது வீட்டின் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமியையும், அவரது பெரியம்மாவையும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கிணற்றில் குதித்து காப்பாற்றினார். இதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

ஆணி மனிதன்: மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றி, அந்த இடங்களில் மஞ்சள் பொடி எண்ணெய் கலந்த மருந்தை பூசி மரங்களை காப்பாற்றினார். தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் சென்று, மரங்களில் ஆணிகளை அகற்றியதால் இவரை ‘ஆணி மனிதன்’, ஆணி போலீஸ் என்றும் மக்கள் அழைக்க தொடங்கினர்.

சுதந்திர தினவிழாவில் ஆட்சியரிடம் பாராட்டு
சான்றிதழ் பெற்ற சுபாஷ் சீனிவாசன்

மேலும் தனது குடும்பத்தினர் பிறந்த நாள், திருமண நாட்களில் அம்மா உணவகங்களில் பணம் செலுத்தி பொதுமக்களுக்கு இலசவமாக உணவு வழங்குகிறார். காலை நடைபயிற்சி செல்லும் பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்குவது, கரோனா காலம் முழுவதும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டார். இவற்றை தனது சொந்த செலவிலேயே செய்தார்.

கருவேலங்காட்டை பூங்காவாக மாற்றினார்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சேதுபதி நகர் செல்லும் வழியில் பல ஆண்டுகளாக சூழ்ந்திருந்த காட்டு கருவேல மரங்களை தனி ஒருவராக வெட்டி அகற்றினார். அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறிய பூங்காவாக மாற்றினார். தற்போது அவை வளர்ந்து சோலைவனமாக காட்சி அளிக்கிறது.

தற்போது இவர் உருவாக்கிய பூங்காவில் பட்டணம்காத்தான் ஊராட்சி நடைபயிற்சி செல்லும் வகையில் பேவர் பிளாக் கற்கள் பதித்து நடைபாதை அமைத்துக் கொடுத்துள்ளது. இவரது சமூக சேவையை பாராட்டி அரிமா சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கி உள்ளன. கடந்த சுதந்திர தினத்தன்று இவரது சேவையை பாராட்டி ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். காவல் துறையில் பணிச் சுமைக்கு இடையிலும் ஓய்வு நேரத்தில் பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன்

இதுகுறித்து சிறப்பு சார்பு ஆய்வாளர் சுபாஷ் சீனிவாசன் கூறும்போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிலமான 3 ஏக்கரில் அடர்ந்து இருந்த காட்டுக் கருவேல மரங்களை ஒற்றை ஆளாக இருந்து அரிவாளால் வெட்டி அகற்றினேன். அந்த இடத்தில் பொதுமக்கள் உதவியுடன் ஏராளமான மரக் கன்றுகளை நட்டேன். ஆனால், தண்ணீர் ஊற்றி பராமரிப்பது சவாலாக இருந்தது. இங்குள்ள ஊருணியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க மின்வசதியில்லை.

அதனால் நானே வாளிகள் மூலம் தண்ணீர் ஊற்றினேன். தற்போது இந்த இடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன். இப்பிறவியில் இச்சமுதாயத்துக்கு ஏதாவது செய்து விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் இதைச் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x