Last Updated : 27 Jun, 2023 02:26 PM

 

Published : 27 Jun 2023 02:26 PM
Last Updated : 27 Jun 2023 02:26 PM

அரிய வகை மரம்... ஆப்பிரிக்க காடுகளில் இருப்பது நம்ம ஊருலேயும் இருக்கு..!

புதுச்சேரி வனத்துறை அலுவலகம் ஒட்டியுள்ள நகர்ப்புற வனத்தில் உள்ள அரியவகை பயோபாப் மரம்

புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் வனத்துறை அலுவலகத்தின் பக்கத்தில், சுதேசி மில்லுக்கு சொந்தமான 22 ஏக்கரில் அடர் வனப்பகுதி உள்ளது.

வனத்துறை கண்காணிப்பில் உள்ள இந்த இடத்தில் ‘பயோபாப்’’ என்ற பொதுப் பெயரும், ‘அடன்சோனியா டிஜிடேட்டா’ என்ற தாவரவியல் பெயரும் கொண்ட பழமையான அரிய வகை மரம் ஒன்று செழுமையாக உள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் இந்த வகை மரங்கள் பல நூறு ஆண்டுகள் வாழக் கூடியவை. இந்த மரம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்த மரம் 90 அடிகளுக்கு மேல் உயரமும், 35 அடிகளைத் தாண்டிய சுற்றளவும் கொண்டு வளரக்கூடியது. தண்டுப் பகுதியில் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரைத் தேக்கி வைக்கக் கூடியது. இதன் பூக்கள் இரவில் மட்டும் பூக்கக் கூடியது. அரிதான மரம் என்பதால் இது புதுச்சேரி வனத்துறை கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது.

இது குறித்து புதுச்சேரி வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி கூறுகையில், ‘‘இங்கு 2 பயோபாப் மரங்கள் இருந்தன. தானே புயலின்போது ஒரு மரம் மின்னல் தாக்கியதில் அழிந்தது. தற்போதுள்ள இம்மரம், பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் நடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். சுற்றளவு சுமார் 14 மீட்டர் வரை உள்ளது. தொடர்ந்து இந்த மரம் வனத்துறையின் பராமரிப்பில் உள்ளது ’’ என்றார்.

இதுபற்றி ஓய்வுபெற்ற வன பாதுகாவலர் தேவராஜ் கூறும்போது, “இரு பயோபாப் மரங்களை 2003-ல் கண்டறிந்து, கண்காணிக்க தொடங்கினோம். ஆண்டு தோறும் இந்த மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டது. அப்போது ஒரு மரத்தின் சுற்றளவு 9 மீட்டர் வரை இருந்தது. இந்த மரங்களை பார்க்க வேண்டுமானால் ஆப்பிரிக்கா நாட்டுக்கு தான் செல்ல வேண்டும். நம்ம ஊரிலேயே இது இருப்பதால் ஆர்வத்துடன் அவற்றை பராமரித்தோம்.

முத்தியால்பேட்டையில் ஒரு இடத்தில் இந்த வகை மரம் ஒன்று உள்ளது. அதனை அப்பகுதி மக்கள் சிலர் கடவுளாக மாற்றி வழிபடுகின்றனர். சூழியல் பயன்பாட்டுக்கு பயனளிக்கும் இதுபோன்ற மரங்களை தேடித்தேடி பாதுகாப்பது மிக அவசியம்” என்று தெரிவித்தார்.

இந்த மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதன் விதைகளை சேகரித்து ஒரு கட்டத்தில் வனத்துறையினர் பொது மக்களுக்கு வழங்கி வந்தனர். ஆனால், அதன் வளர்ச்சி முறை, விதைப்பில் ஏற்பட்ட சாதக பாதகங்கள் தொடர்பான தொடர் கண்காணிப்பு நடைபெறவில்லை. உரிய வளர்ப்பு முறை வழிகாட்டுதல்களுடன் மீண்டும் விதைகள் சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டால் இந்த ‘பயோபாப்’ மரத்தை பல்கி பெருகச் செய்யலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x