Last Updated : 17 Jun, 2023 05:54 AM

 

Published : 17 Jun 2023 05:54 AM
Last Updated : 17 Jun 2023 05:54 AM

கேக் ருசியால் கவரப்பட்டு மூணாறு வனப்பகுதியில் இருந்து இடம்பெயரும் வரையாடுகள்

போடி: மூணாறில் உள்ள வரையாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் கேக் வழங்குவதால் அதன் ருசியால் கவரப்பட்ட வரையாடுகள் அடிக்கடி வனத்தில் இருந்து கேன்டீன் பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.

கேரள மாநிலம் மூணாறு சர்வதேச மலைவாசஸ்தலமாக உள்ளது. இங்கு மாட்டுப்பட்டி அணை, சின்னக்கானல் நீர்வீழ்ச்சி, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

மேலும், ராஜமலையில் உள்ள இரவிகுளம் தேசியப்பூங்கா சுற்றுலாப் பயணிகளை வெகுவாய் கவர்கிறது. இங்குள்ள வரையாடுகளே இதற்குக் காரணம். செங்குத்தான பாறைகளில் ஏறும் தன்மை உள்ள இந்த வரையாடுகள் இங்கு அதிகளவில் உள்ளன. மூணாறில் இருந்து 7 கிமீ.தூரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. ரூ.200 கட்டணம் பெறப்பட்டு வனத்துறை வாகனங்களிலே சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கி உள்ளதால் இப்பகுதியில் இதமான குளிர் நிலவுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். வனப்பகுதியில் உள்ள வரையாடுகளை பார்ப்பதற்காக தார்சாலை வசதி உள்ளது. இதில் ஒரு கிமீ.தூரம் வரை நடந்து சென்று வரையாடுகளைப் பார்க்கலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்காக நுழைவுப்பகுதியில் உள்ள கேன்டீனில் டீ, காபி உள்ளிட்ட பானங்களுடன் பல்வேறு வகையான கேக் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கி உண்ணும் சுற்றுலாப் பயணிகள் பலரும் அருகில் சுற்றித்திரியும் வரையாடுகளுக்கும் இவற்றை வழங்குகின்றனர். இதன் ருசியால் கவரப்பட்ட பல ஆடுகள் தற்போது வனப்பகுதியில் இருந்து ஒரு கிமீ.தூரம் உள்ள கேன்டீனுக்கு அடிக்கடி இடம் பெயர்கின்றன.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்துக்கு இடையே ஊடுருவிச் செல்லும் இந்த ஆடுகள் கீழே சிதறிக் கிடக்கும் கேக் சிதறல்களையும் விட்டு வைக்காமல் உண்ணுகின்றன. தொடக்கத்தில் சில ஆடுகள் மட்டும் வந்த நிலையில் தற்போது கூட்டம் கூட்டமாக கேன்டீன் பகுதியில் முகாமிடுகின்றன. இதனால், அதன் உணவுப் பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வனத் துறை ஊழியர்கள் இந்த வரையாடுகளை அவ்வப்போது வனத்துக்குள் விரட்டுகின்றனர். இருப்பினும் இதுபோன்ற இடம்பெயர்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குப்பைத் தொட்டிகளில் உள்ள கேக் பேப்பர்களையும் வரையாடுகள் உண்பதால் தற்போது மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பு இருப்பதால் வரும்காலங்களில் வரையாடுகள் இப்பகுதிக்கு வருவது தடுக்கப்படும், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x