Published : 24 May 2023 05:58 AM
Last Updated : 24 May 2023 05:58 AM
சென்னை: சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து விதமான தனியார் பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரை கட்டாய மொழிப் பாடமாக தமிழ் இருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநர் நாகராஜமுருகன், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து விதமான பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, 2015–16-ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடமானது. 2016–17-ம் கல்வி ஆண்டில் 2-ம் வகுப்புக்கும், அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமலானது.
அதன்படி 2022–23-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் வரும் 2023–24-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு வரையும், 2024–25-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு வரையும் தமிழ் பாடம் கட்டாயமாகிறது. இது மாநில பாடத்திட்ட பள்ளிகளுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் செயல்படும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்துவித பள்ளிகளுக்கு பொருந்தும்.
தகுதியான ஆசிரியர்கள் பணியமர்த்தல்: இந்த மாணவர்கள் பொதுத்தேர்விலும் தமிழை ஒரு தேர்வாக கட்டாயம் எழுத வேண்டும். இதற்கான தேர்வு முறை மற்றும் பாடத்திட்டம் போன்றவை விரைவில் வடிவமைக்கப்படும். எனவே, அனைத்துவித தனியார் பள்ளிகளும், தமிழில் தகுதியான ஆசிரியர்களாக பணியமர்த்தி, மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கட்டாயம் கற்றுத் தர வேண்டும். தமிழ் கட்டாய பாடமுறை குறித்த அறிவிப்பை, தனியார் பள்ளிகள் கடைபிடிப்பதை அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...