Published : 17 Mar 2023 06:00 PM
Last Updated : 17 Mar 2023 06:00 PM

50,000 மாணவர்கள் ஆப்சென்ட்: துணைத் தேர்வு எழுதவைக்க பள்ளிக் கல்வி துறையின் திட்டம் என்ன? 

தேர்வு எழுதும் மாணவர்கள் | கோப்புப் படம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆப்சென்ட் ஆன 50,000 மாணவர்களை துணைத் தேர்வு எழுதவைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நேற்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தேர்வு மையம் வாரியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலை எடுத்து அதற்கான காரணத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 24-ம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஜூன் தேர்வில் இவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடங்க உள்ள 10-ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதினார்கள் என்ற நிலையை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதை செயல்படுத்தும் விதமாக வரும் 24-ம் தேதி மற்றும் ஏப்ரல் 10ம் தேதிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் அனைத்து உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதில் பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்கி உள்ளார். இதன் விவரம்:

10-ம் வகுப்பு தேர்வு குறித்து 24-ம் தேதி நடைபெறும் கூட்டம்:

  • 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும்.
  • நீண்ட நாட்கள் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் சிறப்பு பயிற்சியில் கலந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலை சேகரிக்க வேண்டும்.
  • இவர்கள் அனைவரும் அடுத்த தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும்.

12-ம் வகுப்பு தேர்வு குறித்து 10-ம் தேதி நடைபெறும் கூட்டம்:

  • தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தேர்வுக்கு வராத மாணவர்களை கண்டறிய வேண்டும்.
  • 12-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் துணைத் தேர்வு தொடர்பாக ஆலோசனை வழங்க வேண்டும்
  • 14417 உதவி மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • துணைத் தேர்வு எழுதுவதற்கான முன் தயாரிப்பை மேற்கொள்ள பள்ளி அளவில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த வேண்டும்.
  • பொதுத் தேர்வு குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x