Published : 17 Feb 2023 04:05 AM
Last Updated : 17 Feb 2023 04:05 AM

பிளஸ் 2 மாணவர்கள் அகமதிப்பீடு மதிப்பெண் - பிப்.28-க்குள் பதிவேற்ற உத்தரவு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண் பட்டியலை பிப்.28-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மார்ச் 13 முதல் செய்முறைத் தேர்வு: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில் செய்முறைத் தேர்வு, வருகைப் பதிவு, இணைச் செயல்பாடுகள் தொடர்பான அகமதிப் பீட்டு மதிப்பெண்ணை மார்ச் 2-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அகமதிப்பீடு பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இன்று (பிப்.17)முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பிப்.23 முதல் 28-ம் தேதிக்குள் மேற்கண்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன்பின் அகமதிப் பீடு மதிப்பெண் பட்டியல்களை மாவட்ட தேர்வுத்துறை அலுவலகத்தில் மார்ச் 2-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x