Published : 16 Feb 2023 09:54 PM
Last Updated : 16 Feb 2023 09:54 PM

பிரிட்டிஷ் கவுன்சிலின் மகளிர் அறிவியல் ஃபெல்லோஷிப் வென்ற புதுச்சேரி பல்கலை. முன்னாள் மாணவி

முனைவர் தபஸ்ஸும் அப்பாஸி மற்றும் துணைவேந்தர் குர்மீத்சிங்

புதுச்சேரி: சர்வதேச விருதான பிரிட்டிஷ் கவுன்சிலின் மதிப்புமிக்க மகளிர் அறிவியல் ஃபெல்லோஷிப்பை வென்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான முனைவர் தபஸ்ஸும் அப்பாஸிக்கு புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத்சிங் பாராட்டுகளையும், ஆசிகளையும் வழங்கினார்.

உலக தரவரிசை பட்டியலில் உயர்ந்த இடத்தில் உள்ள (2023QS உலக மதிப்பீட்டின்படி 15வது இடத்தில் உள்ளது) எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அவர் அதனைப் பெறவுள்ளார். மேலும், அங்கு அவர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலை நிர்வகிப்பதில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பணியாற்றவுள்ளார்.

டாக்டர் தபஸ்ஸும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயில்கையில், அத்துறையில் முதலிடம் பெற்றதற்காக தங்கப் பதக்கம் வென்றதோடு, பின்னர் அதே பல்கலையில் தனது முனைவர் பட்டம் முடித்த இவர், தான் ஆரம்பித்த புதுமையான ஆராய்ச்சி முயற்சியினை எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேலும் விரிவாக மேற்கொள்ளவுள்ளார். அவரது Ph.D பணியிலிருந்து எழும் வெளியீடுகள் ஏற்கனவே உலகம் முழுவதிலுமிருந்து 1200 மேற்கோள்களைப் பெற்றுள்ளது. இது அவரை உலகளாவிய அறிவியல் துறையில் வளர்ந்து வரும் நட்சத்திரமாகவும் உலகின் ஒட்டுமொத்த சிறந்த 12% விஞ்ஞானிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் தபஸ்ஸும் கடந்த 4 ஆண்டுகளாக உதவிப் பேராசிரியராக (தற்போது மூத்த தர அளவு) டேராடூனில் உள்ள UPES பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, தற்போது பல்கலைக்கழகம் வழங்கிய ஓய்வுக்கால விடுப்பில் எடின்பர்க் செல்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இதன் அத்தனை பெருமைகளும் தான் பயின்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கும், குறிப்பாக, தான் சிறந்து விளங்குவதற்கான சூழ்நிலையையும், உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்த புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங்கையே சேரும் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x