Published : 09 Feb 2023 04:10 AM
Last Updated : 09 Feb 2023 04:10 AM

விருத்தாசலம் அருகே வண்ணான்குடிகாட்டில் பள்ளிக் கட்டிடம் கட்டக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

வண்ணான்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கடலூர்: விருத்தாசலம் அருகே வண்ணான் குடிகாட்டில், பழுதான பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன பிறகும், அதை கட்டித் தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அருகே உள்ள வண்ணான்குடிகாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால், கடந்த5 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டிடத்தில் உள்ள வகுப்பறைகளில் பயின்று வருகின்றனர்.

இட நெருக்கடியால் இரு பள்ளி மாணவர்களும் தவிக் கின்றனர். பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டா மல் புதிதாக ஊராட்சிமன்ற அலுவலகத்தை கட்ட ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு அந்தகிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடிக்கப்பட்ட இடத்தில் பள்ளிக்கான புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என்று பலமுறை விருத்தாசலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இக்கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அந்தகிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் வண்ணான்குடிகாடு கிராமத்தின் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. பின்னர் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் தனர். அதன் பின்னர் சாலை மறி யல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x