Published : 05 Apr 2025 03:35 PM
Last Updated : 05 Apr 2025 03:35 PM
சென்னை: சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ம் தேதி கடைசி நாள், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இம் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் இன்று (ஏப்.5) முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 6,7 மற்றும் 8-ம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதுக்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கு ஏப்.30ம் தேதி கடைசி நாள். அன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
மேலும் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மைய அலைப்பேசியினை 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்று கொள்ளலாம். முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகின்ற மே 2ம் தேதி அன்று காலை 7 மணியளவில் நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தடகளம் (இருபாலர்), குத்துசண்டை(ஆண்) பளுதூக்குதல் (ஆண்) ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மே 2ம் தேதி காலை 7 மணிக்கும், டென்னிஸ் (பெண்) நுங்கம்பாக்கம், விளையாட்டரங்கம், மே 2ம் தேதி காலை 7 மணிக்கும், ஜிம்னாஸ்டிக்ஸ் (இருபாலர்), நீச்சல் (இருபாலர்) வேளச்சேரி AGB நீச்சல் குள வளாகத்தில் மே 2ம் தேதி காலை 7 மணிக்கும், வில்வித்தை (ஆண்) சைக்கிளிங்(இருபாலர்), இறகுபந்து (இருபாலர்) செங்கல்பட்டு, மேலக்கோட்டையூர் TNPESUவில் மே 2ம் தேதி காலை 7 மணிக்கும் மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும்.
விளையாட்டுத் தகுதிகள்: தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில, மாவட்ட அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI), இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற ஆவார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment